ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 349 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்: குடும்பத்தினர் ஆனந்த கண்ணீர்
மும்பை: உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் இருந்து மீட்கப்பட்ட 349 இந்தியர்கள் நாடு திரும்பினர்.

உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனில் 4 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களை மீட்டு பத்திரமாக இந்தியா அழைத்து வரும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 31ம் தேதி இரவு ஏமனில் உள்ள ஏடன் துறைமுகத்தில் இருந்து 349 இந்தியர்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் மூலம் மீட்கப்பட்டு அண்டை நாடான ஜிபோட்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஏப்ரல் 1ம் தேதி மதியம் ஜிபோட்டியை அவர்கள் அடைந்தனர். அவர்கள் விமானப்படையைச் சேர்ந்த 2 விமானங்கள் மூலம் இந்தியா அனுப்பி வைக்கப்பட்டனர். 190 பேர் மும்பைக்கும், 169 பேர் கொச்சிக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

169 பேருடன் கிளம்பிய விமானப்படை விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அவர்களை கேரள மாநில வெளிநாடு வாழ் கேரள மக்கள் விவகாரத்துறை அமைச்சர் கே.சி. ஜோசப் மற்றும் மாநில துறைமுகம் மற்றும் கலால் வரித் துறை அமைச்சர் கே. பாபு ஆகியோர் வரவேற்றனர்.
190 பேருடன் கிளம்பிய விமானப்படை விமானம் இன்று காலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. மகாராஷ்டிரா மாநில சுற்றுலா மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா மற்றும் எம்.பி. கிரித் சோமையா ஆகியோர் அந்த 190 பேரை வரவேற்றனர்.

ஆபரேஷன் ராஹத் எனப் பெயரிடப்பட்டுள்ள மீட்பு பணியின் முதல்கட்டம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. மீட்கப்பட்ட 349 பேரில் 206 பேர் கேரளாவையும், 40 பேர் தமிழகத்தையும், 31 பேர் மகாராஷ்டிராவையும், 23 பேர் மேற்கு வங்கத்தையும், 22 பேர் டெல்லியையும் சேர்ந்தவர்கள். பிற மாநிலங்களை சேர்ந்த சிலரும் மீட்கப்பட்டவர்களில் அடக்கம்.












Click it and Unblock the Notifications