நிலக்கரி சுரங்கத்தை திறக்க ரூ.2.55 கோடி லஞ்சம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி உட்பட மூவர் ”சஸ்பெண்ட்”!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கிட்டதட்ட 2 கோடியே 55 லட்ச ரூபாய் லஞ்ச வழக்கில் கைதான ஐ.ஏ.எஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மூடப்பட்ட நிலக்கரிச் சுரங்கத்தைத் திறப்பதற்கு அனுமதி வழங்குவதற்கு 2 கோடியே 55 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட கனிமவளத் துறையின் முதன்மைச் செயலரும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அசோக் சிங்வியை பணியிடை நீக்கம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சித்ரோகரைச் சேர்ந்த நிலக்கரிச் சுரங்க அதிபர் ஷெர்கானுக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கங்களின் உரிமத்தை நிலக்கரித் துறை ரத்து செய்தது. இதையடுத்து மூடப்பட்ட சுரங்கங்களை மீண்டும் செயல்பட அனுமதி வழங்குவதற்கு ஷெர்கானிடம் இருந்து அசோக் சிங்வி ரூபாய் 2.55 கோடி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறைக்குக் கிடைத்த தகவலையடுத்து, உதய்ப்பூர், பில்வாரா ஆகிய நகரங்களில் மூன்று இடங்களில் நேற்று முன்தினம் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.
இதுதொடர்பாக நிலக்கரித் துறை கூடுதல் இயக்குநர் பங்கஜ் கெலாட், மூத்த பொறியாளர் பி.ஆர்.அமேதா, பட்டயக் கணக்காளர் ஷியாம் சிங் சிங்வி, இடைத்தரகர்களாக செயல்பட்ட சஞ்சய் சேத்தி, ரஷீத் கான் ஆகியோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
பின்னர், ஜெய்ப்பூரில் மருத்துவமனை சாலையில் உள்ள அசோக் சிங்கிவியின் வீட்டில் புதன்கிழமை இரவு சோதனை நடத்தப்பட்டது. அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டது. இதையடுத்து, அசோக் சிங்வி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவருடைய வீட்டில் இருந்து சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக நேற்று போலீசார் தெரிவித்திருந்த நிலையில் கனிமவளத் துறை முதன்மைச் செயலரும், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான அசோக் சிங்வியை பணியிடை நீக்கம் செய்து ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அவருடன், உதய்பூர் பகுதியின் கனிமவளத் துறை கூடுதல் இயக்குனர் பங்கஜ் கெலாட், மற்றும் பில்வாரா பகுதியின் மூத்த சுரங்கப் பொறியாளர் பி.ஆர். அமேதா ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications