ஐ.ஏ.எஸ் அதிகாரி மரணம்: கர்நாடக சட்டசபையை முடக்கிய எதிர்கட்சிகள்.. இரவிலும் உள்ளேயே தூங்கினர்!
பெங்களூரு: ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி கர்நாடக சட்டசபையில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து வழக்கை புலனாய்வு காவல்துறைக்கு மாற்றி முதல்வர் சித்தராமைய்யா உத்தரவிட்டுள்ளார்.
நேர்மையான ஐஏஎஸ் அதிகாரியான டி.கே.ரவி, கோரமங்களாவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் மின்விசிறியில் கடந்த திங்கட்கிழமையன்று உயிரிழந்த நிலையில் தூக்கில் தொங்கியபடி கிடந்தார்.

உள்ளிருப்பு போராட்டம்
மணல் கொள்ளை, ஊழலுக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்துள்ளது. கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. எனவே, ரவி மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக சட்டசபையில் பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முடக்கிய எதிர்கட்சிகள்
நேற்று இரவு (செவ்வாய்க்கிழமை) முழுதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவைக்குள்ளேயே தங்கினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பாஜக ஆட்சி காலத்தில் இதேபோல ஒரு போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபையினை முடக்கியுள்ளனர்.
மக்கள் கேட்கிறார்கள்
ரவியின் மரணத்திற்கு சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையல்ல... இது மக்களின் கோரிக்கையாகும் என்று எதிர்கட்சியினர் அப்போது முழக்கமிட்டனர். நாங்கள் அரசுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் வைக்கவில்லை ஆனால் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை என்கின்றனர் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள்.
சிஐடி விசாரணை
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலை அடுத்து வழக்கை புலனாய்வு காவல்துறைக்கு மாற்றி முதல்வர் சித்தராமைய்யா உத்தரவிட்டார். ஆனாலும், அதனை ஏற்க மறுத்த பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.எல்.ஏ.க்கள் இன்றும் சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications