பெங்களூரில் ஐபிஎம் ஊழியர் குத்திக் கொலை.. 4 பேர் கும்பல் வெறிச்செயல்
பெங்களூர்: பெங்களூரில் ஐபிஎம் கால் சென்டர் மேனேஜரான அபிஷேக் திம்மராயப்பா அவர் வீட்டு வாசலில் வைத்து 4 பேரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரின் மைசூர் ரோடு அருகே உள்ள பந்தரபாளையாவில் வசித்து வந்தவர் அபிஷேக் திம்மராயப்பா(30). ஐபிஎம் நிறுவன கால் சென்டரில் மேனேஜராக பணியாற்றி வந்தார். வியாழக்கிழமை பணி முடிந்து காலை 4 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது அவரது வீட்டு வாசலில் வைத்து அவரை 4 பேர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயம் அடைந்த அபிஷேக் கெங்கேரியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபிஷேக் நயந்தனஹள்ளி அருகே உள்ள நியூ நேஷனல் பள்ளியின் உரிமையாளர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்த அவரது தந்தை நயந்தனஹள்ளி கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர்.
அபிஷேக் ரஷ்மி என்பவரை காதலித்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்த ரஷ்மிக்கு இது இரண்டாவது திருமணம் என்றும், அபிஷேக்கிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிவிட்டது, அவருக்கு 2 வயதில் மகள் உள்ளார் என்றும் இரு வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாகவே அபிஷேக்கிற்கு யாரோ போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரிய வந்துள்ளது.