மக்கள் விரும்பினால் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டி- கெஜ்ரிவால்
பெங்களூர்: மக்கள் நான் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று விரும்பினால் அதை நான் ஏற்பேன். வாரணாசியில் போட்டியிடுவேன் என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பெங்களூர் சுதந்திரப் பூங்காவில் நேற்று மாலை நடந்த ஆம் ஆத்மி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் இப்படி அறிவித்தார் கெஜ்ரிவால்.
கூட்டத்தில் அழர் பேசுகையில், மார்ச் 23ம் தேதி நான் வாரணா்சி போகிறேன். அங்கு கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். அப்போது வாரணாசி மக்கள் என்ன சொல்கிறார்களோ அதைக் கேட்பேன். அவர்கள் விரும்பினால் அங்கு நான் போட்டியிடுவேன்.

வாரணாசி மக்கள் அந்தப் பொறுப்பை என்னிடம் கொடுத்தால் அதை நான் தட்டிக் கழிக்க மாட்டேன். முழு மனதுடன் அதை ஏற்பேன்.
கட்சிக்குள்ளும் கூட நான் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிட வேண்டும் என்று கூறி வருகிறார்கள். அதுகுறித்து விவாதித்து வருகிறோம்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதோ, அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதோ எங்கள் நோக்கம் அல்ல. இந்த நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்வதற்காகவே நாங்கள் அரசியலுக்கு வந்திருக்கிறோம்.
சுதந்திர போராட்ட தியாகி பகத்சிங் செய்ததைப்போல் இந்த நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால், ஆசீர்வதிக்கப்பட்டவனாக நான் உணர்வேன்.
வாரணாசியில் போட்டியிடும் மோடி, தனது சொந்த மாநிலத்தில் பாதுகாப்பான ஒரு தொகுதியை தேடுவது, பிரதமர் பதவிக்கு அவர் பொருத்தமற்றவர் என்பதையே காட்டுவதாகவும், துணிச்சலான பிரதமர்தான் இந்த நாட்டுக்குத்தேவை என்றார் கெஜ்ரிவால்.
கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீப காலமாக மோடி மீது கடுமையாக விமர்சித்து வருகிறார் கெஜ்ரிவால். மோடிக்கு ஆதரவாக மீடியாக்கள் இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக விலை போய் விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் மோடியை எதிர்த்துப் போட்டியிட தான் தயார் என்று அவர் முதல் முறையாக பகிரங்கமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications