காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி: ஆதரவை விலக்கினால் அவர்கள் தான் வில்லன்கள்- கெஜ்ரிவால்
டெல்லி: காங்கிரஸ் கட்சி ஒரு ஊழல் கட்சிதான். அதனுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. அவர்களது ஆதரவோடு ஆட்சி அமைக்கிறோம் என தெரிவித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் ஆதரவோடு அங்கு ஆட்சி அமைக்க இருக்கிறது.

ஆனால் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த விவகாரத்தில் காங்கிரசில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை கண்டித்து அக்கட்சி தொண்டர்கள் டெல்லியில் உள்ள மாநில காங்கிரஸ் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
இந்நிலையில் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப் படும் என அறிவித்தது ஆம் ஆத்மி. இதனைத் தொடர்ந்து தங்களது ஆதரவு நிபந்தனைகளோடு கூடியது, ஆதரவு எந்த நேரத்திலும் வாபஸ் பெறப்படலாம் எனத் தெரிவித்தது காங்கிரஸ்.
இந்நிலையில், காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சிதான் என செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் விமர்சித்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால். இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘காங்கிரஸ் கட்சி ஒரு ஊழல் கட்சிதான். அதனுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை. அவர்களது ஆதரவோடு ஆட்சி அமைக்கிறோம்
இதனால் டெல்லியில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது. ஒரு வேளை காங்கிரஸ் எங்களுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டால் அவர்கள் தான் வில்லன்கள் ஆவர். மேலும், நாங்கள் மக்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளித்தே ஆட்சி அமைக்கிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications