மிட்நைட் 12 மணிக்கு கதவைத் தட்டினாலும் உங்க பிரச்சனையை நான் கேட்பேன்.... முஸ்லிம் தலைவர்களிடம் மோடி!
டெல்லி: மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்கும் அரசியல் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்று தம்மை சந்தித்த முஸ்லிம் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
டெல்லியில் இமாம் அமைப்புகளின் தலைவர் உமர் அகமது இலியாசி தலைமையில் 30 முஸ்லிம்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தது.
இந்த சந்திப்பின் போது முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் இலியாசி கூறியதாவது:

மதத்தின் பெயரில் மக்களைப் பிரிக்கும் அரசியல் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என பிரதமர் கூறினார். முஸ்லிம்கள் தங்களது பிரச்சனைக்காக நள்ளிரவு 12 மணிக்கு கூட தன் வீட்டு கதவை தட்டலாம் என்றும் அவர் உறுதி அளித்தார்.
அத்துடன் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற அரசியலால் நாம் இழந்தது அதிகம் என்றும் மோடி சுட்டிக்காட்டினார். அனைத்து பிரச்சனைகளுக்குமே வளர்ச்சியும் வேலைவாய்ப்பும்தான் தீர்வாக இருக்கும்; அவற்றை நோக்கித்தான் தமது அரசு செயல்படுகிறது என்றும் அவர் கூறினார்.
இவ்வாறு இலியாஸ் கூறினார்.
இந்த குழுவில் இடம்பெற்றிருந்த சுதந்திரப் போராட்ட தலைவர்களில் ஒருவரான மெளலானா அபுல் கலாம் ஆசாத்தின் கொள்ளுப் பேரன் பெரோஷ் அகமது கூறுகையில், நாங்கள் ஒரு பிரதமரிடம் பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லை. ஒவ்வொருவரையும் அவர் தனித்தனியாக சந்தித்து விசாரித்தார். நாட்டின் அனைத்து மதத்தினருக்குமான ஒரு பிரதமராகவே மோடி தம்மை கருதிக் கொள்கிறார். அவர் இந்தியா என்கிற ஒற்றை அடையாளத்தைத்தான் முன்வைக்கிறார் என்றார்.
மேலும் இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவின் மகன் பர்வேஷ் அகமது, அஜ்மீத் தர்கா ஷரீப் மற்றும் பெங்களூர், குஜராத், ஜெய்பூர், மீரட், பாட்னா இமாம்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications