மேகதாது அணையை போர்க்கால அடிப்படையில் கட்டி முடிக்க வேண்டும்: குமாரசாமி முழக்கம்
பெங்களூரு: தமிழக எதிர்ப்புக்கு பணியாமல், காவிரிக்கு குறுக்கே அணை கட்டியே தீர வேண்டும் என்று, கர்நாடக முன்னாள் முதல்வரும், அம்மாநில சட்டப்பேரவை மஜத குழு தலைருமான எச்.டி.குமாரசாமி வலியுறுத்தினார்.
கர்நடாக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய குமாரசாமி கூறியதாவது: மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட கூடாது என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானவை. கர்நாடக சட்டசபையிலும், ஒருமித்த குரலில், தமிழக நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

தமிழகத்தின் மிரட்டல்களுக்கு பணியாமல், எப்பாடுபட்டாவது, மேகதாது அணையை கர்நாடகா கட்ட வேண்டும். ரூ.2 ஆயிரம் கோடி இதற்காக செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளதால், பல ஆண்டுகள் இழுத்தடித்து பணியை முடிக்கலாம் என்று அரசு நினைத்துவிட கூடாது.
இன்னும் 2 வருடங்களில் இந்த அணை கட்டப்பட்டாக வேண்டும். இதற்காக அரசு எங்கு கடன் வாங்கினாலும் கவலையில்லை. போர்க்கால அடிப்படையில் இந்த பணி நடக்க வேண்டும். இந்த அணையின் மூலம், பெங்களூரு ஊரகம், ராம்நகரம், கோலார், சிக்பள்ளாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு குமாரசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications