பாகிஸ்தான் வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு இம்ரான் கான் அழைப்பு
டெல்லி: பாகிஸ்தானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர வேண்டும் என்று தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் அழைப்பு விடுத்ததாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் சந்தித்து வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக இருவரும் பேசினர். இந்த சந்திப்பு தொடர்பாக மத்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது டுவிட்டரில் பக்கத்தில் பதிவு செய்துள்ளது:
இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் அண்மை காலத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நம்பிக்கை தரும் வகையில் உள்ளதாக இரு தலைவர்களும் கூறியுள்ளனர். பிரதமர் மோடியை பாகிஸ்தான் வருமாறு இம்ரான் கான் அழைத்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் குறித்த ‘ஆசியாவின் இதயம்' என்ற பல்நோக்கு மாநாட்டில் சுஷ்மா சுவராஜ் கலந்து கொண்டதை தொடர்ந்து இருநாடுகளின் பேச்சுவார்த்தை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Mr Imran Khan invited PM @narendramodi to visit Pakistan. pic.twitter.com/mxdkTUiYhh
— Vikas Swarup (@MEAIndia) December 11, 2015