"மோடியுடன் தொலைபேசியில் பேச தயார்"... உலக நாடுகள் எதிர்ப்பால் இறங்கி வரும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசுவதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தயாராக உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இதற்கு எரியூட்டும் விதமாக இந்திய விமானப் படை விங் கமாண்டரை பாகிஸ்தான் பிடித்து வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். மேலும் போர் பதற்றம் நீடித்தால் நிலையை கட்டுப்படுத்துவது என் கையிலோ அல்லது மோடி கையிலோ இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் தற்போதுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கு நாங்கள் முன்னுரிமை கொடுத்துள்ளோம். விங் கமாண்டர் அபிநந்தனை விடுவித்தால்தான் அமைதி திரும்பும் என்றால் அதற்கும் நாங்கள் தயார். போர் என்பது தீர்வல்ல.
பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் சுமூக பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கான் தயாராக உள்ளார். அதற்கு மோடி தயாரா என குரேஷி கேள்வி எழுப்பினார்.
இந்த பரபரப்பு தகவல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் உரையாற்றிய போது நாளை அபிநந்தனை விடுவிப்பதாக அறிவித்துள்ளார்.