கோழிக்கோட்டை அதிரவைத்த கொள்ளை.. காரை சேஸ் செய்து.. மிளகாய்ப் பொடியை தூவி.. திக் திக் நிமிடம்
கோழிக்கோடு: கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக கொண்டு சென்று கொண்டிருந்தபோது கார் டிரைவரின் மீது மிளகாய்ப் பொடியை வீசியடித்து 25 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள 3 எஸ்பிஐ ஏடிஎம்களில் சமீபத்தில் ஒரு கும்பல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முகமூடி அணிந்து ஏடிஎம் மையத்துக்குள் செல்லும் நபர் கண்காணிப்பு கேமராவில் ஸ்பிரே அடிக்கிறார். அதன்பிறகு ஏடிஎம் இயந்திரத்தை கியாஸ் கட்டரால் வெட்டும் கும்பல் அந்தப் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர்.

அந்தப் பணத்துடன் அந்த கும்பல் வெள்ளை நிற காரில் தப்பித்து செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, கேரளா போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தமிழகத்துக்கு தப்பித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தமிழக போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே ஒரு ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி செக்போஸ்ட்டில் நிற்காமல் பிற வாகனங்கள் மீது மோதிவிட்டு சென்றது. பின்னர், போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர்.
இந்த சம்பவம் ஓய்வதற்குள் கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக கொண்டு சென்ற கார் டிரைவரின் மீது மிளகாய் பொடி வீசி 25 லட்சம் கொள்ளை அடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ளது பீடிகா என்ற பகுதி. இப்பகுதியில் காரில் ஒரு பெண் உட்பட இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது காரை வழிமறித்த மர்ம நபர்கள் டிரைவரின் கண்ணில் மிளகாய் பொடியை வீசியுள்ளனர். இதில் மிளகாய்ப் பொடியின் எரிச்சலைத் தாங்க முடியாமல் கார் டிரைவர் கதறியுள்ளார்.
அப்போது, காரில் இருந்த ரூ. 25 லட்சம் பணத்தைப் பறித்துக் கொண்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதையடுத்து அவர்களின் சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் காருக்குள் கைகள் கட்டப்பட்டுக் கிடந்தவர்களை மீட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் கார் டிரைவர் சுஹைலையும், அவரது வாகனத்தையும் கைப்பற்றினர்.
விசாரணையில், ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக 25 லட்சம் பணம் கொண்டு சென்றபோது இச்சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. பின்னர், கார் ஓட்டுநர் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சாட்சியங்கள் அனைத்தையும் சேகரித்தனர். மேலும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து, கேரள மாநிலம், பய்யோலி பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சுஹைல் கூறுகையில், ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது மர்மநபர்கள் வழிமறித்தனர். காரை நிறுத்தாமல் செல்ல முயற்சித்தபோது கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி காரை அவர்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர், காரில் இருந்த பணத்தை கொள்ளை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர் என்றனர்.












Click it and Unblock the Notifications