நாளந்தா பல்கலை: கலாமை ஓரங்கட்டி அவமானப்படுத்திய அமார்த்யா சென்... பரபரப்புத் தகவல்கள்!
டெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை, அவரது செல்லத் திட்டமான நாளந்தா பல்கலைக்கழக திட்டத்திலிருந்து வெளியேற்றும் வகையில், மறைமுகமாக கலாமை அமார்த்யா சென் அவமதித்தது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பாக அப்போதைய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கலாம் ஒரு காட்டமான கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில் தனது இதயத்திற்கு நெருக்கமான நாளந்தா திட்டத்திலிருந்து தன்னை விலக்க அமார்த்யா சென் முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார் கலாம். இருப்பினும் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ள கலாம், நடப்பது குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்பியதாக தனது கடிதத்தில் கூறியுள்ளார். நாளந்தா திட்டம் கையாளப்படும் விதம் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும், எனவே இதில் நான் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கலாம் கூறியுள்ளார்.
எல்லாமே தவறாக போய்க் கொண்டிருப்பது தன்னை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாகவும் கலாம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். புத்தர் காலத்து நாளந்தா பல்கலைக்கழகம் அக்காலத்தில் மிகச் சிறந்த உயரிய கல்வி நிறுவனமாக விளங்கியதாகவும். அதை உயிர்ப்பித்து மீண்டும் செயல்படுத்த கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது விருப்பம் தெரிவித்திருந்தார். அதன்படி மத்திய அரசு இந்தத் திட்டத்தை கையில் எடுத்தது.
கலாம் எழுதிய கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது: கடந்த 2007ம் ஆண்டிலிருந்து நாளந்தா பல்கலைக்கழகத்தின் பல்வேறு கல்வி, நிர்வாக கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன். வேந்தர் மற்றும் துணைவேந்தர் பதவிக்கு கல்வி மற்றும் நிர்வாகத்தில் நிரம்பிய அனுபவம் கொண்டவர்களே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இந்த இருவரும் பீகாரிலேயே முழு நேரமும் இருந்து செயல்பட வேண்டும். அதுதான் நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்பான வலிமையான செயல்பாட்டுக்கு உகந்ததாக இருக்க முடியும். ஆனால் நிர்வாகத்தில் இருப்பவர்கள் அதுகுறித்துக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை.
குறிப்பாக துணை வேந்தர் பதவிக்கு தனக்கு மிகவும் நெருக்கமான டாக்டர் கோபா சபர்வாலை, நாளந்தா பல்கலைக்கழக நிர்வாக குழுத் தலைவர் அமார்த்யா சென் நியமித்துள்ளார். இதுகுறித்து அவர் எனது கவனத்திற்குக் கொண்டு வரவே இல்லை.
நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு உரியவர்களைப் பொறுப்பில் நியமிக்காவிட்டால் அந்த நிறுவனத்தின் பெருமைக்கு குந்தகம் ஏற்படும் என்றும் கலாம் கூறியுள்ளார்.
கலாம் குறிப்பிட்டுள்ள கோபா சபர்வால், டெல்லி, லேடி ஸ்ரீராம் கல்லூரியில் சாதாரண ரீடர் பதவி வகித்தவர் ஆவார். அவருக்கு துணை வேந்தர் பதவி கொடுத்தது பொருத்தமற்றது என்று கலாம் கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவு அமைச்சகம்தான் நாளந்தா பல்கலைக்கழக திட்டத்தை சர்வதேச பல்கலைக்கழகமாக அங்கீகரித்து நடத்தி வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, கொரியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட 16 தென் கிழக்கு ஆசிய மற்றும் ஆஸ்திரலேசிய நாடுகள் பங்கெடுத்துள்ளன. இந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கலாம் வலியுறுத்தி வந்தார்.
ஆனால் அப்போதைய மத்திய அரசு அதுகுறித்துக் கண்டு கொள்ளவில்லை. மேலும் கலாம், கிருஷ்ணாவுக்கு எழுதிய கடிதத்தையும் கூட அது மறைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அமார்த்யா சென், பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.












Click it and Unblock the Notifications