மணிப்பூரில் மீண்டும் பயங்கர மோதல்.. துப்பாக்கி சண்டையில் 13 பேர் சுட்டுக்கொலை.. பெரும் பதற்றம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் இருதரப்பு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆயுதக்குழுவினர் பயங்கரமாக மோதிக்கொண்டதில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக பைரன் சிங் உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தான் மைத்தேயி-குக்கி இன மக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் என்பது 3 மாதங்களை கடந்து நடந்தது. 2 பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதோடு 200க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் ஏராளமான வீடு, கடைகள் தீக்கிரையாகின. பல ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலத்தில் தஞ்சமடைந்தனர். இதற்கிடையே தான் கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் வன்முறை என்பது குறைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது மணிப்பூரில் மீண்டும் ஒரு பெரிய மோதல் நடந்துள்ளது. அதாவது மணிப்பூர் மாநிலம் டெங்பால் மாவட்டம் சைபால் பகுதியில் உள்ள லெய்து கிராமம் என்பது மியான்மர் எல்லையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மியான்மர் எல்லை என்பது 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு படையின் முகாம் ஒன்று உள்ளது.
இந்நிலையில் தான் நேற்று நேற்று இரு ஆயுதக்குழுக்களுக்கு இடையே லெய்து கிராமத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்தவுடன் பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். ஆனால் அங்கு மோதலில் ஈடுபட்டவர்கள் மாயமாகி இருந்தனர். ஆனால் 13 பேரின் உடல்கள் அங்கு கிடந்தன. அவர்களின் உடல்களில் குண்டு காயங்கள் இருந்தன. துப்பாக்கிச்சண்டையில் அவர்கள் பலியாகி இருந்தது தெரியவந்தது.
இந்த உடல்களை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு இறந்தவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? அவர்களின் விபரம் எதுவும் தெரியவில்லை. இருப்பினும் இறந்தவர்கள் சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வரும் பிஎல்ஏ குழுவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
சில நாட்களுக்கு முன்பு தான் மத்திய அரசு முன்னிலையில் மணிப்பூர் அரசுக்கும், அங்கு ஆயுதம் ஏந்தி போராடிய யூஎன்எல்எப் குழுவுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் தான் தற்போது இப்படியொரு மோதல் ஏற்பட்டு 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மணிப்பூரில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications