கிரிக்கெட்டில் சாதித்த சச்சின்... நாடாளுமன்றத்தில் 'டக் அவுட்'
டெல்லி: சச்சின் டெண்டுல்கர் சரிவர நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினின் பணியை பாராட்டி, அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவையில் நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

சச்சினை எம்.பி.,-யாக நியமித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறது என காங்கிரஸ் கட்சியை அப்போது பலரும் விமர்சித்தனர். அதேசமயம், நாடாளுமன்றத்தில் சச்சினின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்தது. ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக சச்சினின் செயல்பாடு மீது கடும் விமர்சனங்கள்தான் எழுந்தன.
நாடாளுமன்ற கேள்வி நேரத்தை இரு வகைகளாக பிரிப்பது வழக்கம். ஸ்டார் குறியீடு வைத்த கேள்விகள் மற்றும் ஸ்டார் குறியீடு அல்லாத கேள்விகள். அதில், எழுத்துபூர்வமாக கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 7 கேள்விகளை மட்டுமே சச்சின் கேட்டுள்ளார்.
ஆனால், மற்றவர்கள் சுமார் 244 கேள்விகளை கேட்டுள்ளனர். அதேபோல், மற்றவர்கள் சராசரியாக 78 சதவீதம் வருகை பதிவை பெற்றுள்ள நிலையில், சச்சினின் வருகை பதிவு வெறும் 7 சதவீதம் தான். பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் நாடாளுமன்றத்தில் தனது முதல் கேள்வியை சச்சின் கேட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
அதேபோல் ஹிந்தி நடிகை ரேகா 2012ல் ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டவர். ஆனால் அவரின் வருகை பதிவும் 5 சதவீதம்தான். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முனனர் பதவியேற்ற நடிகர் மிதுன் சக்ரபூர்த்தி 10 சதவீதமும் வருகை பதிவாக பெற்றுள்ளனர்.
இந்த தகவலை, நாடாளுமன்றம் மற்றும் அதன் கொள்கைகளை கண்காணிக்கும் நிறுவனமான "பி.ஆர்.எஸ். லெஜிஸ்லேடிவ் ரிசர்ச்" எனும் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி இரு அவைகளிலும் ஒரு எம்.பி. 60 நாட்கள் வரவில்லை என்றால், அவர்கள் இடம் காலியானதாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications