பேன்களில் ஸ்பிரீங், சத்தம் எழுப்பும் சென்சார்.. மாணவர்கள் தற்கொலையை தடுக்க புதிய முயற்சி!
மாணவர்கள் தற்கொலையை தடுக்க ராஜஸ்தான் கல்வி மையங்களில் புதிய கொண்டுவரப்படவுள்ளது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்வி மைய விடுதிகளில் உள்ள பேன்களில் எடை கூடினால் இறங்கும் வகையில் ஸ்பிரிங்குகளை அமைக்கவும் சத்தம் எழுப்பும் வகையில் சென்சார் கருவிகளை பொருத்தவும் அம்மாநில கல்வி மையங்கள் முடிவு செய்துள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் கல்வி மையங்களுக்கான நுழைவுத் தேர்வு மற்றும் நீட் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்கள் தேர்வில் தோல்வியடையும் போது சில சமயங்களில் மனமுடைந்து தங்களது விடுதி அறையில் உள்ள ஃபேன்களில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 17 மாணவர்கள் இங்கு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அதிகபட்சமாக 2014-ம் ஆண்டில் 45 மாணவர்கள் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து ராஜஸ்தான் மாநில அரசு மாணவர்களின் தற்கொலையை தடுப்பது தொடர்பாக வழிமுறைகளை உருவாக்க அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அந்நகரில் உள்ள பயிற்சி மைய மாணவர்கள் விடுதி அறையில் உள்ள ஃபேன்களில் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதை தடுக்கும் விதமாக, ஃபேனில் ஸ்பிரிங் மற்றும் ரகசிய சென்சார் பொருத்தப்பட உள்ளதாக பயிற்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
20 கிலோவுக்கு அதிகமான எடை பேனில் தொங்கும் போது ஸ்பிரிங் தானாக செயல்பட்டு பேனை கீழ் நோக்கி இழுத்துவிடும். மேலும், ரகசிய சென்சாரானது எடை அதிகமானவுடன் சைரன் மூலம் சப்தம் எழுப்பும். இந்த முறையால் மாணவர்களின் தற்கொலையை பெருமளவில் தடுக்கலாம் என பயிற்சி மைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயிற்சி நிறுவனங்களின் இந்த திட்டத்துக்கு பெற்றோர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.