உ.பி தேர்தல்.. மம்தா போடும் மாஸ்டர் பிளான்! 2024க்கும் சேர்த்து ஸ்கெட்ச் போடும் மம்தா! ஏன் முக்கியம்
கொல்கத்தா: உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தல், விரைவில் நடைபெறும் நிலையில், மம்தா பானர்ஜி 2024க்கும் சேர்ந்தே வியூகம் அமைத்துள்ளார்.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் வரும் பிப்.8இல் தொடங்குகிறது
மொத்தம் 403 இடங்களைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக் குறைந்தது 202 இடங்களில் வெல்ல வேண்டும்.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களத்தில் உள்ள போதிலும் இதில் பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி தொடங்கிப் பல முக்கிய தலைவர்களும் பாஜகவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் உ.பி-இல் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவு அளித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக இன்று பிரசாரம் செய்தார்.

2024
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வெற்றிபெற வேண்டும் என்பது தான் எனது விருப்பம். மக்கள் அவரை ஆதரித்தால், இந்த தேர்தலில் அகிலேஷ் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடாது. ஆனால், 2024 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் உத்தரப் பிரதேசத்திலும் போட்டியிடும்" என்று அவர் தெரிவித்தார்.

முக்கியம்
மம்தா பானர்ஜி ஏற்கனவே வரும் 2024 தேர்தலுக்குத் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு கூட்டணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காகத் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இது தவிரக் கோவா, அசாம் என மேற்கு வங்கத்திற்கு வெளியேயும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் மம்தா ஈடுபட்டுள்ள நிலையில், இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

80 தொகுதிகள்
ஏனென்றால், மக்களவை தேர்தலைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேசம் மிகவும் முக்கியமான ஒன்று. உபி-இல் இருந்து மட்டும் 80 மக்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குச் செல்கின்றனர். மேலும், கடந்த காலங்களில் உத்தரப் பிரதேசத்தில் யார் அதிக இடங்களைக் கைப்பற்றுகின்றனரோ அவர்களே ஆட்சியை அமைத்து வந்துள்ளனர். கடந்த 2014 தேர்தலில் 71 இடங்களிலும், 2019இல் 62 இடங்களிலும் பாஜக வென்று இருந்தது. இது பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெல்லப் பெரியளவில் உதவியது.

கூட்டணி
இதனால் 2024 மக்களவை தேர்தலில் சமாஜ்வாடி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால் அது பாஜகவுக்கு கடும் போட்டியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் தற்போது வரை வெளியான கருத்துக்கணிப்புகளில் பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே கடும் போட்டி உள்ளதாகவே கூறப்படுகிறது. இந்தச் சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications