செம.. மசூதிக்கு ரூ.1.2 கோடி நிலம் தானமளித்த இந்து சகோதரிகள்! தந்தையின் ஆசையை நிறைவேற்றி நெகிழ்ச்சி
டேராடூன்: உத்தரகாண்டில் இந்து சகோதரிகள் 2 பேர் ரூ.1.2 கோடி மதிப்பிலான 2.1 ஏக்கர் நிலத்தை மசூதிக்கு தானமாக எழுதி கொடுத்துள்ளனர். இதன்மூலம் 19 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தங்களின் தந்தையின் ஆசையை நிறைவேற்றி அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங் நகர் மாவட்டம் காசிபூர் நகரை சேர்ந்தவர் லால் பிராச்நந்தன் ராஷ்டோகி. இவருக்கு அனிதா (வயது 62), சரோஜ் (57) என்ற மகள்கள் உள்ளனர். ராகேஷ் என்ற மகன் உள்ளார்.
லால் பிராச்நந்தன் விவசாயி ஆவார். இவர் தனது கிராமத்தில் உள்ள பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். 2003ல் இறந்தார்.

தந்தையின் கடைசி ஆசை
லால் பிராச்நந்தனின் மகள் சரோஜ் திருமணம் முடிந்து மீரட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அனிதா டெல்லியில் வசித்து வருகிறார். ராகேஷ் மட்டும் சொந்த ஊரில் வசிக்கிறார். மகள்கள் 2 பேரும் அவ்வப்போது மட்டும் சொந்த ஊர் வந்து சென்றனர். இந்நிலையில் தான் லால் பிராச்நந்தன் தனது நிலத்தில் ஒருபகுதியை முஸ்லிம் மக்களுக்கு வழங்க முடிவு செய்தார். அவர்கள் நமாஸ் செய்ய போதிய அளவில் இடமில்லை என்பதால் நிலம் கொடுத்து உதவ அவர் முடிவு செய்தார். இந்த ஆசையை நிறைவேற்றும் முன்பே அவர் எதிர்பாராதவிதமாக இறந்தார்.

In Uttarakhand Hindu sisters Fulfil father's last wish donate Rs 1.2 Crore land to Mosque
இந்த விஷயம் அவரது மகன், மகள்களுக்கு தெரியாமல் இருந்தது. இந்நிலையில் தான் சமீபத்தில் கிராம மக்கள் லால் பிராச் நந்தனின் ஆசை குறித்து அவரது மகள்களிடம் கூறினர். இதையடுத்து தந்தையின் ஆசையை நிறைவேற்ற இருவரும் முடிவு செய்தனர். அதன்படி இருவரும் ரூ.1.20 கோடி மதிப்பிலான 2.1 ஏக்கர் நிலத்தை கிராமத்தில் உள்ள மசூதிக்கு எழுதி கொடுக்க முடிவு செய்தனர். இதற்கு அவரது சகோதரர் உதவி செய்தார்.

நிலம் ஒப்படைப்பு
இதையடுத்து ரம்ஜானுக்கு முந்தை நாள் நிலம் மசூதி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று நடந்த ரம்ஜான் தொழுகை அந்த நிலத்தில் நடைபெற்றது. இதுபற்றி ராகேஷ் கூறுகையில், ‛‛எனது தந்தை மதநல்லிணக்கத்தில் அதிக விருப்பம் கொண்டவர். முஸ்லிம்கள் நமாஸ் செய்ய வசதியாக தனது நிலத்தை வழங்க முடிவு செய்தார். அவரது ஆசையை எனது சகோதரிகள் நிறைவேற்றி உள்ளனர்.''

மிகப்பெரிய இதயம்
இதுபற்றி ஈத்கா கமிட்டின் தலைவர் ஹசீன் கான் கூறுகையில், ‛‛ லால் பிராச்நந்தன் ராஷ்டோகி மிகப்பெரிய இதயம் கொண்டவர். அவர் வாழும்போது முக்கிய நிகழ்வுகளுக்காக கமிட்டி சார்பில் முதல் நன்கொடை அவரிடம் தான் பெறுவோம். பணம் மட்டுமின்றி பழங்கள், இனிப்புகளையும் வழங்குவார். அவர் இறப்புக்கு பிறகு அவரது மகன் நன்கொடைகள் வழங்கி வருகிறார்.

மதங்களை கடந்த சகோதரத்துவம்
லாலா மற்றும் எனது தந்தை முகமது ராஜா ஆகியோர் 50 ஆண்டுகால நெருங்கிய நண்பர்கள். அவர்கள் மதங்களை கடந்து சகோதர்களாக வாழ்ந்தனர். இந்த பகுதிகளில் அனைத்து மக்களும் மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகிறோம். மசூதி அருகே குருத்வாரா மற்றும் அனுமன் கோவில் உள்ளது. இருப்பினும் பிரச்சனைகள் ஒருபோதும் வந்தது இல்லை. நேற்று காலை அனுமன் கோவில் பூஜாரி என்னிடம் வந்து ரம்ஜான் தொழுகை நேரத்தை கேட்டு கொண்டார். நான் 9 மணி என கூறவே அவர் தனது கோவில் ஒலிபெருக்கியை அந்த சமயத்தில் ஆப் செய்தார் '' என்றார்.

தலை வணங்குகிறேன்
ஈத் கமிட்டின் உறுப்பினரும், அந்தபகுதி கவுன்சிலருமான நவ்சாத் உசேன் கூறுகையில், ‛‛லாலா பிராச்நந்தன் மற்றும் அவரது குடும்பத்தினரின் செயல் பற்றி அனைத்து குடும்பத்திலும் பேசுகிறோம். நாம் தற்போது மதநல்லிணக்க அச்சுறுத்தலுக்கு மத்தியில் வாழ்கிறோம். இந்த வேளையில் அவர்களின் மதசார்பின்மைக்கு தலை வணங்குகிறேன். இத்தகைய நபர்கள் இருக்கும் வரை நாட்டின் அமைதிக்கு பாதிப்புகள் வராது'' என நம்பிக்கை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications