டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றினார் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி!!
நாட்டின் 68வது குடியரசு நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொடியேற்றினார்.
டெல்லி: நாட்டின் 68வது குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லி ராஜ்பாத்தில் கொடியேற்றினார். இதில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் பங்கேற்றார்.
இந்தியாவின் 68 குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாத்தில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி கொடியேற்றினார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கண்கவர் ராணுவ அணிவகுப்பை பார்வையிட்ட அவர், முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.
முப்படையின் பலத்தை பறைசாற்றும் வகையில் இந்த அணிவகுப்புகள் நடைபெற்றன. இதில் அக்னி ஏவுகணைகள், பீரங்கிகள், இந்திய ராணுவ ஊர்திகள் இடம்பெற்றன. மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வாகனங்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அபுதாபி இளவரசர் ஷேக் முகம்மது பின் சயீத் அல் நஹ்யான் பங்கேற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குடியரசு தினத்தையொட்டி இன்று காலை 10.35 மணி முதல் 12.15 மணி வரை டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தக விமானங்கள் இறங்கவும், புறப்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.