அந்நிய செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியதன் மூலம் இஸ்ரோவுக்கு ரூ. 630 கோடி வருமானம்
டெல்லி: வெளிநாடுகளை சேர்ந்த 45 செயற்கைக் கோள்களை இந்திய ராக்கெட்கள் வாயிலாக விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோவுக்கு ரூ. 630 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘இஸ்ரோ' பிற நாடுகளின் செயற்கைக் கோள்களையும், இந்திய ராக்கெட்டுகள் வாயிலாக விண்ணில் செலுத்தி வருகிறது. இதுவரை 19 நாடுகளுக்கு சொந்தமான 45 செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் ஏவியுள்ளது. இதன் மூலம் ரூ.645 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக மத்திய விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். மேலும், ‘வரும் 2017-ம் ஆண்டுக்குள், இன்னும் 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளதால் கூடுதல் வருவாய் கிடைக்கும்' என அவர் கூறியுள்ளார்.
இதேபோல், 2017-ம் ஆண்டில் இருந்து 2020-ம் ஆண்டுக்குள், ரூ.3 ஆயிரத்து 90 கோடி மதிப்புள்ள 15 சிறியரக பி.எஸ்.எல்.வி. செலுத்து வாகனங்களை வடிவமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாகவும் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.