பெங்களூர்: திருநங்கைகள்- ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ‘க்யு ரேடியோ’
பெங்களூர்: ஓரினச் சேர்க்கையாளர்கள், ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர்கள் மற்றும் பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர்களுக்கு என பிரத்யேகமான வானொலி சேவையை பெங்களூரை சேர்ந்த ‘கியு ரேடியோ' துவக்கியுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த ரேடியோவில் மேற்கண்ட சமுதாயத்தினருக்கான சிறப்பு தகவல்கள், மருத்துவ குறிப்புகள், நேயர் விருப்ப பாடல்கள் ஆகியவை 24 மணி நேரமும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. ரேடியோவாலா.இன் என்ற நிறுவனம் இந்த ஒலிபரப்பை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த ஒலிபரப்பு சேவை குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரும் பங்குதாரருமான அனில் ஸ்ரீவத்சவா கூறியதாவது:-
2009-ம் ஆண்டு எங்கள் வானொலியின் டெல்லி நிகழ்ச்சியில் இந்த சமுதாயத்தினர் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றை நான் தொகுத்து வழங்கினேன்.
அன்றிரவு முதல் அவர்கள் மத்தியில் எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. ஒரு நிகழ்ச்சியிலேயே இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் போது, இவர்களுக்கு என தனியாக ஒரு சேனலை தொடங்கினால் என்ன ? என சிந்தித்தேன். அது இப்போதுதான் செயல் வடிவம் பெற்றுள்ளது என்றார்.
பொதுவாக மீடியாக்களாலும் சமூக வலைத்தளங்களிலும் இவர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகின்றனர். இவர்களையும் முன்னிலைப் படுத்தக்கூடிய பிரதிநிதிகள் தேவை. இவர்களுக்குள் இருக்கும் எண்ணங்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லும் சாதனம் தேவை. அந்த சாதனமாக இந்த கியு ரேடியோ அமையும் என கருதுவதாக ஸ்ரீவத்சவா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications