இந்தியா - பாகிஸ்தான் திடீர் துப்பாக்கி சண்டை.. காஷ்மீர் எல்லையில் கடும் மோதல்.. பதற்றம்
ஜம்மு காஷ்மீர்: இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் கடந்த மே மாதம் 10ம் தேதி நடந்தது. அதன்பிறகு எல்லையில் அமைதி திரும்பியது. இந்நிலையில் தான் நேற்று திடீரென்று ஜம்மு காஷ்மீர் எல்லையில் நம் நாட்டின் ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே சுப்பாக்கி சண்டை நடந்தது. இருவீரர்களும் மாறிமாறி துப்பாக்கியால் சுட்டு கொண்ட நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் பலியாகினர். இதற்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் கடந்த மே மாதம் 7ம் தேதி பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

இது இருநாடுகள் இடையே போராக மாறியது. துல்லிய தாக்குதல் மூலமாக பாகிஸ்தானை நம் நாட்டு வீரர்கள் பந்தாடினர். இதனால் பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. போரை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து மே மாதம் 10ம் தேதி போர் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு இருநாடுகளின் எல்லையில் அமைதி திரும்பியது.
இந்நிலையில் தான் நேற்று திடீரென்று எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா நவ்கம் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே நம் ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்துள்ளது. நேற்று மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த துப்பாக்கிச்சண்டை சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்தது.
இந்த சண்டையில் இருநாடுகளின் வீரர்களும் மாறிமாறி துப்பாக்கியால் சுட்டுக்கொண்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக ராணுவம் தரப்பில், ‛‛எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இருநாடுகள் இடையே துப்பாக்கிசண்டை நடந்தது. இந்த சண்டை இது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மே மாதம் 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை 4 நாட்கள் போர் நடந்தது. அப்போது நம் நாடு பாகிஸ்தான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் விமானப்படை தளம், ராணுவம் தளம் அழிக்கப்பட்டது. பாகிஸ்தான் நம்மை தாக்க முயன்றது. ஆனால் அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
மாறாக நம் நாட்டின் அதிரடி தாக்குதலால் பயங்கரவாதிகள் தற்போது ஆப்கானிஸ்தான் எல்லைக்கு இடம்பெயர்ந்துள்ளன. அதேவேளையில் சில இடங்களை பாகிஸ்தான் மீண்டும் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே தான் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து இருப்பது எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications