இந்தியாவை தாக்க.. 6 போர் விமானங்களில் கொத்து கொத்தாக பாகிஸ்தானுக்கு ஆயுதம்?துருக்கி அந்தர்பல்டி
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் புல்மேடு பகுதியில் கடந்த வாரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான், கராச்சியில் உள்ள விமானப்படை தளத்துக்கு துருக்கி விமானப் படைக்குச் சொந்தமான விமானம் தரையிறங்கியதாக தகவல் வெளியான நிலையில், துருக்கி சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் கடந்த வாரத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர். பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது, இருநாட்டு எல்லைகள் மூடல் என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த தாக்குதல் சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராக பேசி வருவது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய விமானப்படை, தரைப்படை, கப்பற்படை என முப்படைகளும் போருக்குத் தயார் நிலையில் உள்ள நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
போர் பதற்றம் காரணமாகவும், சுற்றுலாப் பயணிகள் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாலும் காஷ்மீரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தூஷ்பத்ரி, கோகர்நாக், டக்சம், சிந்தன் டாப், அச்சாபல் உள்ளிட்ட 48 முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில், துருக்கி நாட்டின் சார்பில் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் விமானப் படை தளத்துக்கு துருக்கி நாட்டின் விமானப் படைக்குச் சொந்தமான 'சி -130 ஹெர்குலிஸ்' போர் விமானம் நேற்று முன்தினம் சென்றுள்ளது. அதில், ஏராளமான போர் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதுபோல, இஸ்லாமாபாத் விமானப் படை தளத்துக்கும், ஆறு 'சி -130 ஹெர்குலிஸ்' ரக போர் விமானங்களை துருக்கி நேற்று அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போர் விமானங்கள் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தபோதிலும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட ராணுவ தளவாடங்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், பாகிஸ்தானுக்கு துருக்கி நாட்டில் இருந்து சரக்கு விமானம் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாகவும், போர் விமானங்களை அனுப்பவில்லை என்றும் துருக்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
துருக்கி பாகிஸ்தான் இடையே பொருளாதார ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் நல்லுறவு நிலவி வருகிறது. இருப்பினும் இதுவரை விமானங்கள் இறங்காத நிலையில், திடீரென விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், எரிபொருள் நிரப்பவே விமானங்கள் தரையிறக்கப்பட்டதாக துருக்கி நாட்டினர் மறுப்புத் தெரிவிப்பது போன்று அந்தர் பல்டி அடித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications