அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்வி-2 ஏவுகணை சோதனை வெற்றி
பலசூர்: அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்வி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இன்று நடந்துள்ளது.
ஒடிஷா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் இருந்து அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் பிரித்வி 2 ஏவுகணை இன்று பகல் 12.10 விண்ணில் ஏவப்பட்டது. இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிநவீன தொழில்நுட்பத்தால் ஆன பிரித்வி 2 ஏவுகணை 500 முதல் 1000 கிலோ அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. பிரித்வி 2 ஏவுகணை கடந்த 2003ம் ஆண்டு ராணுவத்தில் இணைக்கப்பட்டது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி சந்திப்பூர் தளத்தில் இருந்து பிரித்வி 2 ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.
இது குறித்து விஞ்ஞானி ஒருவர் கூறுகையில்,
ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்த சோதனையை டிஆர்டிஓ விஞ்ஞானிகள் கண்காணித்தனர் என்றார்.