முடிவுக்கு வந்த பாக். உடனான மோதல்! நாடு முழுக்க மீண்டும் திறக்கப்பட்ட 32 ஏர்போர்ட்கள்! முழு லிஸ்ட்
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் மூடப்பட்டன. பாகிஸ்தானின் தொடர் தாக்குதலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஏர்போர்ட்கள் மூடப்பட்டன. இப்போது இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அனைத்து விமான நிலையங்களும் மீண்டும் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் பாதுகாப்புப் படைகள் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூரில் தீவிரவாத முகாம்களை மட்டுமே இந்தியா தாக்கியது. அதில் சுமார் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருப்பினும், பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதலை நடத்தின.

இந்தியாவின் தாக்குதல்
இந்திய ராணுவம் அனைத்துத் தாக்குதல்களையும் வெற்றிகரமாக முறியடித்தது. முதலில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது திரும்பத் தாக்குதல் நடத்தவில்லை. இருப்பினும், மூன்றாவது நாள் திருப்பித் தாக்கத் தொடங்கியது. குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள சக்லாலா ஏர் பேஸ், முரிட் ஏர் பேஸ் (சக்வால்), ரஃபிகி ஏர் பேஸ் (ஷோர்கோட்), ரஹீம் யார் கான் ஏர் பேஸ் (தெற்கு பஞ்சாப்), சுக்கூர் ஏர் பேஸ் / பாஃப் பேஸ் போலாரி, சூனியன் ஏர் பேஸ் ஆகிய இடங்களில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வரலாம் எனத் தூதுவிட்டது. இந்தியாவும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்டது. இதன் மூலம் கடந்த சில நாட்களாக எல்லையில் நிலவிய பதற்றம் முடிவுக்கு வந்தது. கடந்த சில நாட்களாக எல்லையோரப் பகுதிகளில் ட்ரோன்களை பாகிஸ்தான் ஏவி வந்த நிலையில், நேற்றைய தினம் ட்ரோன்கள் எதுவும் வரவில்லை.
32 ஏர்போர்ட்கள்
இந்த மோதல் சமயத்தில் பாகிஸ்தான் தனது ஏர் ஸ்பேஸை மொத்தமாக மூடியிருந்தது. அதேநேரம் இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் விமானச் சேவை வழக்கம் போலவே இருந்தது. எல்லையோரப் பகுதிகளில் மட்டுமே 32 இடங்களில் விமானச் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது மோதல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அந்த 32 விமான நிலையங்களும் கூட திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
திறக்கப்பட்ட விமான நிலையங்கள்
இது தொடர்பாக AAI எனப்படும் இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மே 15 05:29 மணி வரை சிவில் விமான நடவடிக்கைகளுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்களும் இப்போது உடனடியாகத் திறக்கப்படுகின்றன" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளன. மேலும், விமான சேவை தொடங்கப்படுவது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வெளியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஏர்போர்ட்கள்?
அடம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானேர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மேர், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கன்கர், ஜோத்பூர், குலு மணாலி (பூந்தர்), லே, லூதியானா, முந்த்ரா, நலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோய்ஸ் மற்றும் உத்தரலை ஆகிய விமான நிலையங்கள் இப்போது மீண்டும் திறக்கப்படுகின்றன.
இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இந்த 32 விமான நிலையங்களிலும் விமானச் சேவை மீண்டும் தொடங்குகின்றன. சில நாட்களில் இங்கும் விமானச் சேவை இயல்பு நிலைக்குத் திரும்பும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications