வங்கதேச போரில் ஷேக் ஹசீனாவைக் காப்பாற்றிய இந்திய ராணுவம்.. உதவியாளர் பெருமிதம்
டெல்லி: வங்கதேச விடுதலைப் போரின்போது தற்போதைய வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவையும், அவரது குடும்பத்தினரையும் எதிரிகளின் பிடியில் இருந்து இந்திய ராணுவத்தினர்தான் காப்பாற்றினர் என்று ஹசீனாவின் தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மானிடம் உதவியாளராகப் பணியாற்றியவரான ஹாஜி கோலம் மோர்ஷெட் கூறியுள்ளார்.
கடந்த 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த விடுதலைப் போரில், இந்தியாவின் உதவியுடன் வங்கதேசம் தனி நாடாக உருவானது. அப்போது இந்தியப் பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி.

அதன் 44-வது ஆண்டை நினைவுகூறும் நிகழ்ச்சி, டாக்காவில் புதன்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மோர்ஷெட் இவ்வாறு கூறினார்.
வீட்டிலேயே சிறைபிடிப்பு:
அவர் கூறுகையில் "முஜிபுர் ரஹ்மானின் மனைவி பேகம் பாஸிலதுன்னிஸா, மகள் ஷேக் ஹசீனா உள்ளிட்ட அவரது நான்கு குழந்தைகளை பாகிஸ்தான் படையினர் ஒரு வீட்டில் சிறைப் பிடித்து வைத்திருந்தனர். அப்போது, இந்திய ராணுவ மேஜர் அசோக் தாரா தலைமையிலான இந்திய வீரர்கள் 4 பேருடன் நான் அங்கு சென்றேன்.
கொன்று விடுவதாக மிரட்டல்:
வெறியோடு அந்த வீட்டையே பார்த்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் படையினரிடம் மேஜர் அசோக் தாரா நெருங்கிச் சென்றபோது, ஒரு அடி எடுத்து முன்னால் வைத்தாலும், கொன்று விடுவதாக அவர்களில் ஒருவன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான்.
தைரியமாக செயல்பட்ட வீரர்:
நாங்கள் செய்வதறியாது திகைத்த அந்த நேரத்தில், முஜிபுர் ரஹ்மானின் குடும்பத்தினரை அவர்கள் கொலை செய்துவிடுவார்கள் என்றே நினைத்தேன். அப்போது, அசோக் தாரா மிகவும் தைரியமாகச் செயல்பட்டார்.
காப்பாற்றிய இந்திய ராணுவம்:
போரில் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்து விட்டது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அது உங்களுக்குத் தெரியவில்லை என்று அவர்களிடம் அசோக் தாரா கூறினார். அதையடுத்து, அங்கிருந்து அவர்கள் விலகிச் சென்றதால் முஜிபுர் ரஹ்மானின் குடும்பத்தினரை இந்திய ராணுவத்தினர் பத்திரமாகக் காப்பாற்றினர். இந்தச் சம்பவம், கடந்த 1971 ஆம் ஆண்டு இதே நாளில் நடந்தது என்று தெரிவித்துள்ளார்" ஹாஜி கோலம் மோர்ஷெட்.












Click it and Unblock the Notifications