Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரஷ்ய படையெடுப்பு:செல்ல சிறுத்தைகளுடன் யுக்ரேனில் சிக்கியிருக்கும் இந்திய மருத்துவர்-திரும்பி வர மறுப்பது ஏன்?

Subscribe to Oneindia Tamil

ரஷ்ய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் யுக்ரேனில் பாதுகாப்புக்காக ஒரு அடித்தளத்தில், தனது இரண்டு பெரும்பூனைகளுடன் தங்கியிருக்கிறார் இந்த இந்திய மருத்துவர். இந்தப் பெரும்பூனைகளில் ஒன்று ஒரு கருஞ்சிறுத்தை மற்றொன்று ஜாகுவார்.

சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் மிருகக்காட்சிசாலையில் இருந்து இந்த இரண்டு செல்லப்பிராணிகளையும் வாங்கிய கிரிகுமார் பாட்டீல், இப்போது தனது செல்லப்பிராணிகள் இல்லாமல் யுக்ரேனை விட்டு வெளியேற மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

கிழக்கு யுக்ரேனின் டான்பாஸ் பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரமான செவெரோடொன்யட்ஸ்கில் அவர் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறார்.

இந்தப் போர் தொடங்கிய பிறகு கிரி, தனது செல்லப்பிராணிகளுக்கு உணவு வாங்குவதற்காக மட்டுமே தான் பதுங்கியிருக்கும் அடித்தளத்தை விட்டு வெளியே வருகிறார். இவரிடம் இருக்கும் ஆண் ஜாகுவாரின் வயது 20 மாதங்கள் மற்றும் பெண் சிறுத்தை ஒரு ஆறு மாத குட்டி. (ஜாகுவார், ஆண் சிறுத்தை மற்றும் ஒரு பெண் ஜாகுவார் இடையே உருவான ஒரு அரிய கலப்பினம் என்கிறார் கிரி. )

இதுவரை, 23 கிலோ செம்மறி ஆடுகள், வான்கோழி மற்றும் கோழி இறைச்சியை அண்டை கிராமங்களில் இருந்து வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிக விலையில் வாங்கியதாக கூறுகிறார் கிரி.

மேலும், "எனது செல்லப் பிராணிகள் என்னுடன்தான் அடித்தளத்தில் இரவுகளைக் கழிக்கின்றன. எங்களைச் சுற்றி நிறைய குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. இதனால் அவை பயந்து, குறைவாகவே சாப்பிடுகின்றன. இந்த நிலையில், என்னால் அவற்றை விட்டுவிட முடியாது," என்கிறார்.

'இது எனக்கு இரண்டாவது போர்'

"இது நான் காணும் இரண்டாவது போர். ஆனால் இதுகுறித்து மிகவும் அச்சமாகவுள்ளது," என்கிறார்.

2014 ஆம் ஆண்டு முதல் போர்நிறுத்த உடன்படிக்கை இருந்தபோதிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் யுக்ரேன் படையினருடன் சண்டையிட்டு வரும் லுஹான்ஸ்கில், தான் முன்பு வசித்து வந்ததாக கூறுகிறார் கிரி. அந்த பகுதியில் நடந்த சண்டையின் போது, அவரது வீடும், அவர் நடத்திவந்த ஒரு இந்திய உணவகமும் அழிக்கப்பட்டன என்றும் தெரிவித்தார்.

யுக்ரேன்
Getty Images
யுக்ரேன்

அந்த தாக்குதலுக்குப் பிறகே, அங்கிருந்து சுமார் 100 கி.மீ (62 மைல்) தொலைவில் உள்ள செவெரோடோனெட்ஸ்க் நகரில் ஒரு புதிய இடத்துக்கு மாறினார். அங்கு மருத்துவராக தனது பணியை தொடங்கினார். இந்த புதிய செல்லப்பிராணிகளையும் வாங்கியுள்ளார்.

"இப்போது நான் ஒரு போர் மண்டலத்தில் சிக்கிக்கொண்டேன். இந்த நேரத்தில் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. நான் வீட்டுக்கு வர வேண்டும் என்று எனது பெற்றோர் தொடர்ந்து அழைத்து வருகின்றனர் ஆனால் என் செல்லப்பிராணிகளை விட்டுவிட்டு என்னால் வெளியேற முடியாது," என்கிறார் கிரி.

தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கிரி, சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் உயிரியல் பூங்காவில் இருந்து இந்த சிறுத்தை மற்றும் ஜாகுவாரை சுமார் $35,000 (இன்றைய இந்திய மதிப்பில் 26 லட்சத்து 92 ஆயிரத்து 910 ரூபாய்க்கு) வாங்கியுள்ளார்.

இந்த விலங்குகளை வைத்திருக்க உரிமையாளருக்கு போதுமான இடம் இருந்ததால், அவற்றை தனிப்பட்ட முறையில் விற்க அந்த விலங்கியல் பூங்கா அனுமதித்ததாக கூறிய அவர், மிருகக்காட்சிசாலையால் வழங்கப்பட்ட, விலங்குகளின் பிறப்புச் சான்றிதழ்களையும் காட்டினார்.

2007 ஆம் ஆண்டு மருத்துவம் படிப்பதற்காக யுக்ரேனுக்கு வந்த இவர், 2014 ஆம் ஆண்டு முதல், எலும்பியல் மருத்துவராக இருந்து வருகிறார், இப்போது செவெரோடோனெட்ஸ்கில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். யுக்ரேன் - ரஷ்யா போர் தொடங்கிய பின்னர் இந்த மருத்துவமனை மூடப்பட்டது.

கிரிகுமார் பாட்டீல்
Girikumar Patil
கிரிகுமார் பாட்டீல்

செவரோடோனெட்ஸ்கில், ஆறு அறைகள் கொண்ட இரண்டு மாடிக்கட்டடத்தில் வசிக்கிறார் கிரி அதில் விலங்குகளுக்கான இடமும் உண்டு. இவரிடம் மூன்று நாய்களும் உள்ளன. தனது சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை தனது செல்லப்பிராணிகளுக்காகச் செலவிட்டதாகக் கூறிய அவர், தனது YouTube சேனல்கள் மூலம் இதற்காக கூடுதல் நிதி திரட்ட முயற்சிப்பதாகவும் கூறுகிறார்.

ஏன் இந்த ஆர்வம்?

"எனக்கு பிடித்த தென்னிந்திய திரைப்பட நடிகர் சிரஞ்சீவியை சிறுத்தைகள் உள்ள படத்தில் பார்த்ததில் இருந்து எனக்கு இதுபோன்ற செல்லப்பிராணிகள் மீது ஈர்ப்பு ஏற்பட்டது," என்கிறார்.

வங்கி மேலாளராக இருக்கும் தந்தை மற்றும் பள்ளி ஆசிரியராக இருக்கும் தாயின் மகனான கிரி, தான் எப்போதும் ஒரு "விலங்கு பிரியர்" என்றும், நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகளைத் தன் வீட்டில் வைத்திருப்பதாகவும் கூறினார்.

உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிக்குப் பிறகு, தெலுங்கு சீரியல்களில் சிறிய கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார் கிரி. யுக்ரேனில் உள்ள படங்கள் மற்றும் தொடர்களில் "வெளிநாட்டு" கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யாவுடனான எல்லை, இவரது யுக்ரேன் வீட்டிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால் அப்பகுதியில் ரஷ்யப் படைகள் இருப்பதால் அங்கு செல்வது கடினம் என்றும் கூறுகிறார்.

அத்துடன், "நான் இங்குள்ள ஒரே இந்தியன். இரவில் நான் தனியாகவே இருக்கிறேன். எனது பக்கத்து வீட்டுக்காரர்களில் பெரும்பாலோர் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும், நான் காத்திருக்கப் போகிறேன்," என்கிறார் கிரி.

கிரிகுமார் பாட்டீல்
BBC
கிரிகுமார் பாட்டீல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+