பேஸ்புக் காதலால் காதலனைத் தேடி... பாகிஸ்தான் சென்று திருமணம் செய்த இந்தியப் பெண்
டெல்லி: டெல்லியில் உள்ள பெண் ஒருவர் பேஸ்புக் மூலம் மலர்ந்த காதலால் பாகிஸ்தானுக்கு சென்று வாலிபரை திருமணம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த மெகருன்னிசா என்ற இளம்பெண் 2 மாதங்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் பாகிஸ்தானுக்கு சென்றார். அங்கு சுவாத் மாவட்டத்தில் கலாம் பள்ளத்தாக்கில் உள்ள தனது காதலர் இஜஸ்கான் வீட்டில் தங்கினார்.
சமீபத்தில் இஜஸ்கானும், மெகருன்னிசாவும் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பேஸ்புக் மூலம் ஒருவருக்கொருவர் அறிமுகமான இவர்கள் முதலில் நண்பர்களாக பழகியுள்ளனர்.
உறுதியாக இருந்த காதலர்:
பிறகு அவர்களது நட்பு காதலாக மாறியது. இஜஸ்கானை மறக்க முடியாத மெகருன்னிசா அவரை திருமணம் செய்வதில் உறுதியாக இருந்தார். இஜஸ்கான் வர முடியாத சூழ்நிலையில் இருந்ததால் மெகருன்னிசா பாகிஸ்தான் சென்று திருமணம் செய்து கொண்டார்.
விசா முடிவடைகிறது:
இந்த நிலையில் மெகருன்னிசாவின் 2 மாத சுற்றுலா விசா நாளையுடன் முடிகிறது. ஆனால் இந்தியா திரும்பி செல்ல பயமாக இருப்பதாக மெகருன்னிசா கூறினார்.
சுற்றுலா விசாவை நீட்டிக்க கோரிக்கை:
இஜஸ்கானுடன் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதால் மனிதாபிமான அடிப்படையில் தன் சுற்றுலா விசாவை நீட்டிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு மெகருன்னிசா கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
திருப்பி அனுப்ப முடிவு:
ஆனால் இன்று வரை மெகருன்னிசா வேண்டுகோளை பாகிஸ்தான் ஏற்கவில்லை. அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.