ரயிலில் நிம்மதியா தூங்க ஸ்லீப்பர் கிளாஸ் பயணிகளுக்கும் இனி போர்வை, தலையணை
டெல்லி: தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளின் பயணிகள் ( Sleeper Class) நலனுக்காக, படுக்கை விரிப்பு மற்றும் தலையணையை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை ரயில்வே துறை இம்மாதம் அறிமுகம் செய்கிறது.
இதுவரை, ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த படுக்கை விரிப்புகள், தற்போது தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காகவும் வழங்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஐஆர்சிடிசி நிர்வாக இயக்குனர் ஏ.கே.மனோச்சா கூறியதாவது:
தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. பயணிகள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது படுக்கை விருப்புகளுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்தினால் அதனை அந்தந்த ரயில்வே நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம். சோதனை அடிப்படையில் முதல்கட்டமாக புதுடெல்லி, ஹஸ்ரத் நிஜாமுதின், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், மும்பை சென்டிரல் உள்ளிட்ட 4 ரயில் நிலையங்களில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆன்லைனில் மட்டுமில்லாமல், இந்த ரயில் நிலையங்களில் செயல்படும் ஐ.ஆர்.சி.டி.சி உணவகங்களிலும் இவற்றைப் பெறலாம். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, மேலும் பல ரயில் நிலையங்களுக்கு இவ்வசதி விரிவுபடுத்தப்படும்.
2 படுக்கை விரிப்புகள், ஒரு தலையணைக்கு ரூ.140 செலுத்த வேண்டும். ஒரு போர்வைக்கு ரூ.110 செலுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்தையும் பெற ரூ.250 செலுத்த வேண்டும். மிகக்குறைந்த விலைக்கு விற்கப்படும் இவற்றை பயணிகள் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
மேலும், ஏ.சி வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் இதனை பெற விரும்பினாலும் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications