கடகட வண்டி காமாட்சி வண்டி... ரயில்வேக்கு 162 வயசு... ‘ரயில்’ கேக் வெட்டிக் கொண்டாடிய பயணிகள்!
தானே: நாட்டின் முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதன் 162வது ஆண்டு தினத்தைப் பயணிகள், ரயில் வடிவ கேக் வெட்டி கொண்டாடினர்.
இந்திய ரயில்வே சேவை துவங்கப்பட்டு 162 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 1853ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி முதல் பயணிகள் ரயில் பம்பாய் நகரில் இருந்து தானே நகருக்கு இயக்கப்பட்டது.
அதனைக் கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 16ம் தேதி, இந்திய ரயில்வேயின் ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று 162வது ஆண்டு விழா நேற்றுக் கொண்டாடப்பட்டது.

162வது
இதனை, தானே ரயில் நிலையத்தின் 162வது ஆண்டு தொடக்க விழாவாக நேற்று பயணிகள் மற்றும் அதிகாரிகள் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். தானே ரயில் நிலையத்திற்கு வந்த மின்சார ரயில்கள், நீண்ட தூர ரயில்கள் மீது ரயில்வே அதிகாரிகள், ரயில்வே போலீசார் மற்றும் பயணிகள் மலர்களை தூவி வரவேற்பு அளித்தனர்.

பிரதான ரயில் நிலையம்...
மத்திய ரயில்வே வழித்தடத்தில் உள்ள பிரதான ரயில் நிலையங்களில் ஒன்றாக தானே ரயில் நிலையம் திகழ்கிறது. இங்கு தினமும் 6 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் வந்து போகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவை நடக்கிறது. இது தவிர 60-க்கும் மேற்பட்ட நீண்ட தூர ரயில்கள் தானே ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரியது...
உலகிலேயே மிகப் பெரிய ரயில்வே இந்திய ரயில்வேதான் என்பது குறிப்பிடத்தக்கது. பம்பாய்- தானே இடையே விடப்பட்ட முதல் ரயிலானது பம்பாயிலிருந்து கிளம்பி 57 நிமிடத்தில் தானேவைச் சென்றடைந்தது. மொத்த தூரம் 33.9 கிலோமீட்டர் ஆகும். முதல் ரயிலில் 400 பேர் பயணித்தார்கள்.

தினசரி டிக்கெட் கட்டண வசூல் ரூ. 40லட்சம்...
இந்தியாவின் மிக பிசியான ரயில் நிலையங்களில் தானேவும் ஒன்றாகும். இங்கு 11 பிளாட்பாரங்கள் உள்ளன. 24 டிக்கெட் கவுண்டர்கள் உள்ளன. தினசரி 1100 உள்ளூர் ரயில்களம், 55 பிற ரயில்களும் இங்கு வந்து செல்கின்றன.
தினசரி தானே ரயில் நிலையத்தில் வசூலாகும் டிக்கெட் கட்டண வசூல் ரூ. 40 லட்சமாகும்.












Click it and Unblock the Notifications