பாகிஸ்தானை இந்தியா வெல்ல வேண்டும்... கர்நாடகாவில் ரசிகர்கள் வழிபாடு
பாகிஸ்தான் அணியை சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெல்லவேண்டும் என்று கர்நாடகாவில் ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளனர்.
பெங்களூரு: 8 வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வெல்ல கர்நாடகாவில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.
'மினி உலக கோப்பை' என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், 'பி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் இந்திய அணி தனது முதல் லீக்கில் பரம எதிரியான பாகிஸ்தானுடன் விளையாடி வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என சிறப்பு வழிபாடு ரசிகர்களால் நடத்தப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலத்திலும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என சிறப்பு யாகத்துடன் வழிபாடு நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தியா வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் ஆங்காங்கே சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.