ஆரியபட்டா ஆசிரியராக இருந்த நாளந்தா! 1600 ஆண்டுகளுக்கு முன் இதற்கு தீ வைத்தவர் யார்? ஏன்?
பீகார்: பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்புகள் என்ன? 1600 ஆண்டுகள் பழமையான பல்கலைக்கழகம் எப்படி அழிந்து போனது? அதை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என முதன்முதலாகக் கனவு கண்ட தலைவர் யார்?
ரூ.1,749 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தைப் பிரதமர் மோடி கடந்த 19 ஆம் தேதி அன்று திறந்துவைத்தார். இந்தப் பல்கலைக் கழகம் பீகார் மாநிலம் ராஜ்கிர் பகுதியில் அமைத்துள்ளது. உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்று பெயர் பெற்றது இந்த நாளந்தா.

இரண்டு வளாகங்களாகக் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தில் 40 வகுப்பறைகள் உள்ளன, கிட்டத்தட்ட 1900 மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்கலாம். மிக நவீனமாகக் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்திற்குத் தேவையான மின்வசதியைச் சூரிய ஒளிமூலம் பெற்றுக் கொள்ள முடியும். அப்படியான வசதிகளை இது கொண்டுள்ளது.
மொத்தம் 100 ஏக்கர் கொண்ட மிக அழகிய கட்டடங்கள் சூழ்ந்த இந்தப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் நிறைய நீர்நிலைகள் மிக அழகாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவின் 1600 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்விக்கழகத்தில் ஆரியப்பாட்டா போன்ற ஆசிரியர்கள் கல்வி கற்பித்துவந்துள்ளனர். ராஜ்கிர் பகுதியில் பழங்கால கட்டட இடிபாடுகள் நிறைந்து காணப்படும் இதன் அருகில்தான் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கான புதிய வளாகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது திறந்து வைத்தார்.
நாளந்தாவை உருவாக்கியது யார்? : நாளந்தா பல்கலைக்கழகம் பண்டைய மகத ராஜ்ஜியத்தில் (இப்போது பீகார்) அமைந்துள்ளது. இது கிபி 5ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதிக்கு நாளந்தா ராஜகிரிஹா எனப் பெயர். இன்று ராஜ்கிர் நகருக்கு அருகில், பாடலிபுத்திரத்தில் அமைந்துள்ளது. அதாவது பாட்னாவிற்கு அருகில் அமைந்துள்ளது.

உலகின் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதி கொண்ட முதல் பல்கலைக்கழகமாக இது போற்றப்பட்டு வருகின்றது. சீனா, கொரியா, ஜப்பான், திபெத், மங்கோலியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா உட்பட உலகம் முடிவதிலுமிருந்து அறிஞர்களை இந்தப் பல்கலைக் கழகம் அந்தக் காலத்தில் ஈர்த்துள்ளது. அதற்கான எச்சங்கள் வரலாற்றில் இன்றும் கிடைக்கின்றன. இந்த நாளந்தாவில் மருத்துவம், ஆயுர்வேதம், பௌத்தம், கணிதம், இலக்கணம், வானியல், இந்தியத் தத்துவம் ஆகியவை கற்பிக்கப்பட்டன. கிபி 8 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் பாலா வம்சத்தின் ஆதரவில் இந்தப் பல்கலைக்கழகம் செழித்து வளர்ந்ததுடன் சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றது.
நாளந்தாவில் கற்பிக்கப்பட்ட கணிதம் மற்றும் வானியல் ஆகிய பாடங்கள் மிகச் சிறப்பாகக் கற்பிக்கப்பட்டன. அதன் தாக்கம் உலகம் முழுவதும் இருந்துள்ளது. அதற்கான சான்றுகளும் உள்ளன. இந்தியக் கணிதத்தின் முன்னோடியும் பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தவருமான ஆர்யபட்டா, 6ஆம் நூற்றாண்டில் நாளந்தாவில் கல்வி போதித்துவந்த ஆசிரியர்களில் ஒருவர் என்றால் சும்மாவா?
தர்மபால, சிலபத்ரா ஆகிய மதிப்பிற்குரிய பௌத்த அறிஞர்கள் குழுவால் மாணவர்கள் வழிநடத்தப்பட்டுள்ளனர். 'தர்ம குஞ்ச்' அல்லது 'உண்மையின் மலை' என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பல்கலைக்கழக நூலகத்தில் 9 மில்லியன் ஓலைச்சுவடிகள் இருந்தன. இது புத்த மதத்தின் அறிவுக் களஞ்சியமாகத் திகழ்ந்தது.
எப்படி அழிந்தது? யார் அழித்தது? : சுமார் 1190களில் துர்கோ-ஆப்கானிய இராணுவ ஜெனரலான பக்தியார் கில்ஜியின் தீவைப்பா இந்த நிறுவனம் சாம்பலானது. அந்தத் தீ மூன்று மாதங்கள் வரை நிற்காமல் எரிந்தது. பௌத்த மதத்தின் ஞானக் களஞ்சியம் பற்றி எரிந்து மண்ணோடு மண்ணாக மட்கிப் போனது. இந்தத் தீ விபத்திலிருந்து தப்பிய சில ஓலைச்சுவடிகள் இப்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி கலை அருங்காட்சியகம், திபெத்தில் உள்ள யர்லுங் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

அதன் பின்னர் ஆறு நூற்றாண்டுகள் வரை இதன் சுவடே வெளியே தெரியாமல் மறைந்து போனது. 1812இல் ஸ்காட்டிஷ் சர்வேயர் பிரான்சிஸ் புக்கனன்-ஹாமில்டனால் இது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், 1861 இல் சர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் இதனை பண்டைக்கால பல்கலைக்கழகம் என்று அதிகாரப்பூர்வமாக அடையாளம் கண்டு அறிவித்தார்.
புதிய அத்தியாயம் ஆரம்பம்: நாளந்தா பாரம்பரியத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்ற யோசனையை 2006 இல் அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முன்மொழிந்தார். 2010இல் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. 2014இல் வேலைகள் தொடங்கின.
2016 ஆம் ஆண்டு ராஜ்கிரில் உள்ள பில்கி கிராமத்தில் நிரந்தர வளாகத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அடிக்கல் நாட்டினார். 2017 இல் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு, இப்போது பிரதமர் மோடியால் திறக்கப்பட்டுள்ளது. 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள புதிய வளாகம், பழங்கால வாஸ்து முறைப்படி சுற்றுச்சூழலுக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1,900 மாணவர்கள் படிக்கலாம். 40 வகுப்பறைகள் கொண்ட 2 வளாகங்கள் உள்ளன. 300 பேர் அமரும் இரண்டு அரங்கங்கள் உள்ளன.விடுதியில் 550 மாணவர்கள் வரை தங்கலாம்.












Click it and Unblock the Notifications