இந்தியா-பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தி வைப்பு: பாக். தூதர் அப்துல் பாசித்
டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வார்த்தைகளுக்கான நடைமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறுவ துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அண்மையில் இஸ்லாமாபாத் சென்றிருந்த போது தெரிவித்தார். ஆனால் பதன்கோட் தாக்குதல் சம்பவத்தில் இந்திய பாதுகாப்பு படையினர் 7 பேர் உயிரிழந்த சம்பவத்தால் பேச்சுவார்த்தை தடைபட்டது.

இதனையடுத்து ஜனவரி மாதம் 15-ம் தேதி நடைபெறவிருந்த வெளியுறவுத் துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இருநாடுகளுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே நான் நினைக்கிறேன் என்று இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்தியாவுடன் அமைதியான மற்றும் பதற்றமில்லாத உறவை வைத்துக் கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது. பரஸ்பரம் மாற்றிக் கொள்ளுதல் என்ற அடிப்படையில் பாகிஸ்தான் விசாரணைக் குழு இந்தியாவிற்கு வரவில்லை
பாகிஸ்தானில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை யார் சீர்குலைக்கிறார்கள் என்பதில் நாங்கள் எச்சரிக்கையுடன் இருக்கிறோம். பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் மக்கள் உறுதியுடன் உள்ளனர் என்றார்.
ஆனால், இந்தியா விசாரணைக் குழுவும் பாகிஸ்தான் செல்லும் என்ற புரிதலின் அடிப்படையிலே பாகிஸ்தான் விசாரணைக் குழு இந்தியா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக இந்தியா தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித், பேச்சுவார்த்தைகள் நிறுத்தி வைக்கப்பட்டதாக தற்போது தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications