உள்நாட்டு தயாரிப்பு போர்க்கப்பலான “ஐ.என்.எஸ்.கொச்சி” - இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது
மும்பை: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான "ஐ.என்.எஸ் கொச்சி" இன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
மும்பை கடற்படைதளத்தில் இன்று நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், "ஐ.என்.எஸ் கொச்சி" போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார். உள்நாட்டு தயாரிப்பில், இரண்டாவது மிகப்பெரிய போர்க்கப்பலான, ஐ.என்.எஸ்., கொச்சியில் விண்ணில் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

வ்விழாவில் பேசிய மனோகர் பரிக்கர், "எதிரிகளின் கப்பல் எத்தகையதாக இருந்தாலும் அதை துவம்சம் செய்யும் ஆற்றல் கொண்டது ஐ.என்.எஸ் கொச்சி" என பெருமிதத்துடன் தெரிவித்தார். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய போர்க்கலான ஐ.என்.எஸ் கொச்சி, 7500 டன் எடை கொண்ட போர் விமானங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் ஆற்றல் கொண்டதாகும். சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இக்கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பலில் 40 கடற்படை அதிகாரிகளும், 350 வீரர்களும் பணியாற்ற உள்ளனர்.
ஐ.என்.எஸ் கொச்சி இந்திய கடற்படைக்கு கூடுதல் பலமாக அமையும். இந்திய பெருங்கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தவும் இது பயன்படுத்தப்படும். மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாகவும், இந்திய கப்பல் கட்டும் பணிக்கும் பெருமை சேர்ப்பதாகவும் ஐ.என்.எஸ் கொச்சி அமையும் என கடற்படை உயரதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டில் தயாரான ஐ.என்.எஸ் கொல்கத்தா போர்க்கப்பல் கடந்த ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. ஐ.என்.எஸ் கொச்சியை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு இறுதியில் ஐ.என்.எஸ் சென்னை என்ற போர்க்கப்பலும், 2018-2019 ஆம் ஆண்டில் ஐ.என்.எஸ் விசாகப்பட்டினம் என்ற போர்க்கப்பலும் இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.












Click it and Unblock the Notifications