மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்தபோது சும்மாதானே இருந்தீங்க... காங்.குக்கு பாஜக கேள்வி
டெல்லி: நரேந்திரமோடிக்கு, அமெரிக்க அரசு விசா தரமாட்டேன் என்று சொல்லும்போது, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அமைதியாக இருந்ததே, அது நாட்டை அவமதிக்கும் செயல் கிடையாதா என்று மத்திய வணிகத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள், தாங்கள் இந்தியர்களாக பிறந்ததற்கு வெட்கப்பட்டனர், தற்போது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்கள் பெருமைப்படுகின்றனர் என்று பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போது கூறியிருந்தார்.

டிவிட்டரில் மோடிமயம்
இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. காங்கிரஸ் ஆதரவாளர்கள், டிவிட்டரில், மோடியை கண்டித்து டிரெண்ட் டாப்பிக் உருவாக்கினர். இதற்கு போட்டியாக பாஜக ஆதரவாளர்கள், மோடி இந்தியாவின் பெருமை என்று பொருள்பட, நேற்று மாலை முதல் டிரெண்ட் ஆரம்பித்தனர்.

விசா மறுத்தபோது மவுனம்
இதன்நடுவே, மத்திய வணிக துறை அமைச்சர், நிர்மலா சீதாராமன் கூறுகையில், "குஜராத்தின் முதல்வராக நரேந்திரமோடி பதவி வகித்தபோது, அமெரிக்கா அவருக்கு விசா மறுத்தது. இந்திய நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வருக்கு அமெரிக்கா விசா மறுத்தபோது, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அமைதியாக வேடிக்கை பார்த்தது.

கடிதம் எழுதிய காங்கிரஸ்
இன்னும் ஒருபடி மேலேபோய் காங்கிரஸ் எம்.பிக்கள் உட்பட 63 எம்.பிக்கள், அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதி, மோடிக்கு விசா வழங்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டனர். இதனால் சர்வதேச அளவில் இந்தியாவின் மானம் ஏலம் விடப்பட்டது.

காங்கிரஸ் இரட்டை வேடம்
இப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சி, மோடியின் பேச்சுக்காக அவரை விமர்சனம் செய்வது, அதன் இரட்டை நிலைப்பாட்டைதான் காட்டுகிறது. உண்மையை சொன்னதற்காக மோடி மீது சாட வேண்டாம். காங்கிரஸ் அரசுகளின், ஊழல்களால் இந்தியாவின் புகழ் சர்வதேச அளவில் அசிங்கப்பட்டிருந்தது உண்மைதான் என்றார்.












Click it and Unblock the Notifications