ஊர்ந்து செல்லும் ரோபோ.. நிலவின் மலை மீது பயணம்.. சந்திராயன்-2ன் ரகசியத்தை வெளியிட்ட இஸ்ரோ!
சந்திராயன்-2 திட்டத்திற்காக இஸ்ரோ பல புதிய தொழில்நுட்பங்களை கையாள இருக்கிறது.
Recommended Video
டெல்லி: சந்திராயன்-2 திட்டத்திற்காக இஸ்ரோ பல புதிய தொழில்நுட்பங்களை கையாள இருக்கிறது. இதற்கு மிகவும் குறைந்த அளவிலேயே செலவு செய்யப்பட்டு இருக்கிறது.
இதை உருவாக்க மொத்தமாக 800 கோடி வரை செலவு ஆகி இருக்கிறது. இந்த சந்திராயன் 2 ஏப்ரல் இறுதியில் ஏவப்படும் என்று அமைச்சர் டாக்டர்.ஜித்தேந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அப்போது கால நிலை சரியாக இருக்காது என்பதால் அக்டோபர் மாதம் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்து இருக்கிறார். இதில் உபயோகப்படுத்தப்பட உள்ள தொழில்நுட்பங்கள் வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது.
எப்படி ஆரம்பிக்கும்
ஜிஎஸ்எல்வி எம்கே-2ன் மூலம் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும். இதன் மொத்த எடை 3,290 கிலோ ஆகும். முதலில் பூமியின் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டு அங்கேயே சுற்றும். பின் சுற்றுவட்டப்பாதையின் மூலம் வேகம் அதிகம் ஆன பின் எஞ்சின் ஆன் செய்யப்பட்டு நிலவை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக செல்லும்.
எத்தனை நாள்
பூமியின் வட்டப்பாதையில் இருந்து நிலவின் வட்டப்பாதை 3,82,000 கிமீ தூரத்தில் இருக்கிறது. சந்திராயன்-2 மெதுவாக செல்லும் என்பதால் நிலவின் வட்டப்பாதையை அடைய ஒரு மாதம் ஆகும். சந்திராயன்-1 இதே முறையின் மூலம் மட்டுமே விண்ணில் ஏவப்பட்டது.
இறங்கும்
இதில் இருக்கும் ரோவர் என்ற சிறிய ரோபோட் வாகனம் அங்கு பாராசூட் மூலம் இறக்கப்படும். நிலவின் வடமுனையில் இது இறக்கப்பட உள்ளது. இஸ்ரோ முதல்முறையாக இப்படி ரோவர் ஒன்றை அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மலை மீது ஆராய்ச்சி
நிலவின் வடமுனையில் நிறைய பெரிய மலைகள் இருக்கிறது. இந்த ரோவர் அங்கு இருக்கும் பொருட்களை ஆராய்ச்சி செய்யும். இதுவரை உலகில் எந்த நாடும் நிலவின் வடமுனைக்கு சென்று ஆராய்ச்சி செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேரம்
ஆனால் இந்த ரோவர் நிலவில் மொத்தம் 300 மீட்டர் வரை மட்டுமே செல்ல முடியும். அதேபோல் 15 நாட்களில் இதில் இருக்கும் பேட்டரி தீர்ந்து போய்விடும். அங்கேயே ஆராய்ச்சி செய்து 2 மணி நேரத்தில் இது பூமிக்கு முடிவை அனுப்பும் என்று கூறப்பட்டு உள்ளது.