சர்வதேச அளவில் நேற்று வெயில் வெளுத்து வாங்கிய பட்டியலில் முழுவதும் இடம் பிடித்த இந்தியா
Recommended Video
நாக்பூர்: சர்வதேச அளவில் நேற்று வெயில் வெளுத்து வாங்கிய 15 நகரங்கள் பட்டியலில், அனைத்தும் இந்திய நகரங்களே இடம் பெற்றிருந்தன. வெளிநாட்டை சேர்ந்த தனியார் வானிலை வலைத்தளம் ஒன்று வெளியிட்ட பட்டியலில் தான் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்றிரவு தகவல் ஒன்றை வெளியிட்ட தனியார் வானிலை வலைத்தளம், மத்திய இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மிக அதிபட்சமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது. மத்திய இந்தியாவின் நகரங்களில் இயல்பான வெப்பநிலையை விட அதிகமாக பதிவானதாக கூறியுள்ளது
அதிக வெப்பம் பதிவான நகரங்கள் பட்டியலில் மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் என்ற நகரம் 46.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் முதலிடம் பிடித்துள்ளது. விதர்பா என்ற பகுதியில் உள்ள அகோலா என்ற நகரத்தில், 46.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும் அந்த இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த 15 சூடான நகரங்களில், 9 நகரங்கள் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவை. மத்தியப்பிரதேசத்திலிருந்து 3 நகரங்களும், உத்திரப்பிரதேசத்திலிருந்து 2 நகரங்களும், தெலுங்கானா மாநிலத்திலிருந்து 1 நகரமும் இந்த பட்டியலில் இடம்பெற்றன.
ஃபனி புயல் எங்கே இருக்கிறது.. இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக மாறுகிறது.. இந்திய வானிலை மையம்
45.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி, இந்த பட்டியலில் நாக்பூர் நகரம் 9-வது இடத்தில் இருந்தது. மண்டல வானிலை மையத்தின் தகவல்படி சாதாரண வெப்பநிலையை விட மூன்று டிகிரிக்கு அதிகமாக நேற்று நாக்பூரில் வெப்பநிலை பதிவானதாக கூறப்பட்டது.
இதனிடையே அடுத்து வரும் 5 நாட்களுக்கு விதர்பா, அகோலா, அமராவதி, சந்திராபூர், நாக்பூர், யவத்மல் மற்றும் வார்தா உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பம் கடுமையாக வாட்டி வதைக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 45 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் வெயிலில் அதிகளவு சுற்றாமலும், உடலில் நீர்சத்து வற்றாமலும் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக பாதிப்புடையவர்கள், முதியவர்கள் மற்றும் நாள்பட்ட நோய்கள் கொண்டவர்கள் இந்த சூழலில் கவனமாக இருத்தல் அவசியம். தாகமே இல்லாவிட்டாலும் நாளொன்றுக்கு தேவையான குடிநீரை எடுத்து கொள்ளுங்கள் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.