அக். 18–ல் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மேல்சாந்திகள் தேர்வு!
சபரிமலை: சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகைப்புரம் அம்மன் கோவில்களுக்கான மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் வரும் 18-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற உள்ளது.
முன்னதாக திருவனந்தபுரம் நந்தன்கோட்டில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் வருகிற 9-ந் தேதி மற்றும் 10-ந் தேதி மேல்சாந்திக்கான நேர்காணல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நேர்காணலில் தகுதியுள்ள நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது பெயர்கள் தனித்தனி சீட்டுகளில் எழுதி போட்டு, 18-ந் தேதி நடைபெறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும். திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கமிஷனர், நிர்வாக அதிகாரி மற்றும் பக்தர்கள் முன்னிலையில் குலுக்கல் தேர்வு முறை நடைபெறும்.
இதில் தேர்வு செய்யப்படும் புதிய மேல்சாந்திகளுக்கு, அடுத்த மாதம் 16-ந் தேதி சபரிமலையில் மூலமந்திர பயிற்சி அளிக்கப்படும். அதைத் தொடர்ந்து அடுத்த மண்டல- மகர விளக்கு பூஜை விழாக்காலங்களில் (ஓராண்டு) சபரிமலை அய்யப்பன் மற்றும் மாளிகைப்புரம் அம்மன் கோவில்களில் மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள்.