கரப்பான் பூச்சி சாப்பாடு போட்ட ஐஆர்சிடிசிக்கு அபராதம் விதித்த ரயில்வே!
டெல்லி: வாயில் வைக்கவே முடியாத அளவுக்கு விளங்காத சாப்பாட்டை பயணிகளுக்கு விநியோகித்த இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆர்சிடிசி) மற்றும் 8 நிறுவனங்களுக்கு மொத்தமாக ரூ. 11.50 லட்சம் அபராதத்தை விதித்துள்ளது இந்திய ரயில்வே.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த மாதம் தரக்குறைவான சாப்பாட்டைத் தடுக்கும் வகையிலான அதிரடி ஆய்வில் ரயில்வே ஈடுபட்டது. பல்வேறு ரயில்களில் இந்த சோதனை நடைபெற்றது. அப்போது பல ரயில்களில் தரமில்லாத சாப்பாடு பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அந்தத் தவறைச் செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதில் ஐஆர்சிடிசிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஜூலை 23ம் தேதி இயக்கப்பட்ட கொல்கத்தா ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பரிமாறப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் ஆர்கே அசோசியேட்ஸ், சன்ஷைன் கேட்டரர்ஸ், சத்யம் கேட்டரர்ஸ், பிருந்தாவன் புட் புராடக்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனை நடத்தப்பட்ட ரயில்களில் 13 ரயில்களில் மோசமான உணவு பயணிகளுக்குத் தரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாம்.
குறைந்தபட்ச அபராதமாக ரூ. 50,000 விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ. 1லட்சம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற தவறை 5 முறை செய்தால் அந்த கேட்டரிங் நிறுவனத்தின் உரிமம் பறிக்கப்படும் என்றும் ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓ.. அப்படியானால், 5 முறை கரப்பான் பூச்சி, பல்லி கலந்த சாப்பாட்டை விற்பனை செய்து கொள்ளலாம் போல....!












Click it and Unblock the Notifications