1971-ல் ராஜிவ் ஓட்டிய விமானத்தை கடத்த பாக். உளவு அமைப்பு முயற்சித்தது- திடுக் தகவல்
டெல்லி: 1971ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி விமானியாக இருந்த போது ஓட்டிய விமானத்தை கடத்துவதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு முயற்சித்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் வெளியுறவு கொள்கை வகுப்பு அமைப்பான "ரா"வின் முன்னாள் அதிகாரி ஆர்.கே. யாதவ் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
ஆர்.கே. யாதவ் தமது புத்தகத்தில் 1962ஆம் ஆண்டு சீனாவுடனான யுத்தம், 1965ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான யுத்த காலங்களில் 'ரா' அமைப்பு எப்படியெல்லாம் பணியாற்றியது என்பதை விவரித்துள்ளார்.
மேலும் ரா அமைப்பின் தலைவராக ஆர்.என். காவ் இருந்த போது ஸ்ரீநகரில் இருந்து விமானத்தை கடத்தும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-ன் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதையும் அவர் விவரித்திருக்கிறார்.
"1971ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஐ.எஸ்.எஸ். ஏஜென்ட் ஒருவரை ரா அமைப்பு கைது செய்து விசாரணை நடத்தியது. அப்போது ராஜிவ் காந்தி விமானியாக இருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஸ்ரீநகரில் இருந்து கடத்த ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம் தீட்டியிருந்ததாக அவர் தெரிவித்தார்.
அப்படி கடத்தப்படும் விமானத்தை லாகூரில் தரையிறக்கவும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதனால் வங்கதேச போரின் போது பாகிஸ்தானால் ராணுவ துருப்புகளை அங்கு அனுப்ப முடியாமலும் போனது என்று அப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது.