ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் சுட்டுக்கொலை? தப்பி வந்தவர் தகவல்
சண்டிகர்: ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 39 இந்தியர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அங்கிருந்து தப்பி வந்தவர் கூறியுள்ள பரபரப்பு தகவல் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் நாள் ஈராக்கின் மொசூல் நகரில் கட்டட வேலையில் இருந்த 39 இந்தியர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்து வந்த நிலையில் அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடத்திச் செல்லப்பட்டவர்களில் ஒருவரான ஹர்ஜித் மசி (25) என்பவர் ஈராக்கிலிருந்து தப்பி இந்தியா வந்து சேர்ந்தார். அவரின் மத்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் ஹர்ஜித் மசி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், கடந்தாண்டு ஜூன் மாதம் 11ம் தேதி மொசூல் நகரில் பணியில் இருந்த 39 இந்தியர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கடத்திச் சென்று சிறைவைத்தனர். எங்களுடன் அந்த அறையில் 50 வங்கதேசத்தவர்களும் இருந்தனர். சில நாட்கள் கழித்து நாங்கள் அனைவரும் மற்றொரு பயங்கரவாத குழுவிடம் ஒப்படைக்கப்பட்டோம். அங்கு ஒரு சிறு அறையில் அடைக்கப்பட்ட எங்களை நோக்கி பயங்கரவாத குழு ஒன்று கண்மூடித்தனமாக சுட்டது. இதில் என்னைச் சுற்றி இருந்தவர்கள் அனைவரும் இறந்தனர். நான் இறந்தது போல் நடித்து அங்கிருந்து தப்பி வந்துவிட்டேன் என்றார்.
ஹர்ஜித் மசியின் இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஈராக்கில் கடத்தப்பட்டவர்கள் குறித்து எங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கின்றனர் என்றார். தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள 39 இந்தியர்களை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. அவர்களை கண்டுபிடித்து பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வருவோம் என்றும் சுஷ்மா கூறினார். ஹர்ஜித் மசியின் தகவல்கள் நம்பிக்கை அளிக்கும்படி இல்லை. நான் நம்பிக்கையை இழக்க விரும்பவில்லை என்று சுஷ்மா கூறியுள்ளார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருவதாக ஆம்ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. 39 இந்தியர்களின் நிலை என்ன என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அக்கட்சியின் எம்.பி பகவான் மான் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications