சூரியனை நோக்கி ஆதித்யா எல் விண்கலம்1.. PSLV-C57 ராக்கெட் ரெடி! புகைப்படங்களை வெளியிட்டது இஸ்ரோ
ஸ்ரீஹரிகோட்டா: நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 லேண்டரும் ரோவரும் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ள நிலையில், இதனைத் தொடர்ந்து தற்போது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்1 விண்கலம் செப்டம்பர் மாதம் 2ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்காக PSLV-C57 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைய உள்ளது ஆதித்யா எல்1 எனும் திட்டம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். சூரியனை ஆய்வு செய்ய முக்கியமான காரணம் அதிலிருந்து வெளிவரும் காந்த புயல்தான். இந்த காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டதாகும்.

இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. இந்தியா சார்பில் முதன் முதலில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான்.
சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்யும். பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் 'லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்' எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இது சூரியனை நோக்கிய கோணத்தில் வைக்கப்படும். தொடர்ந்து சூரியனில் நடக்கும் மாற்றங்களை ஆய்வு செய்வதுதான் இதன் பணி. பெங்களூரு யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எஸ்டிஎஸ்சி-ஷார் விண்வெளி நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது.

வந்து சேர்ந்த விண்கலம் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் PSLV-C57 ராக்கெட்டுடன் பொருத்தப்பட்டு தற்போது சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவுதளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ராக்கெட் வரும் செப்டம்பர் மாதம் 2ம் தேதியன்று காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. அதேபோல இந்த ராக்கெட் ஏவுவதை நேரில் பார்க்க விரும்புவோர் அதற்கான உரிய கட்டணம் செலுத்தி நேரில் வந்து பார்க்கலாம் என ஆய்வு மையம் அழைப்பு விடுத்திருக்கிறது.

அதன்படி https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp எனும் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்று ரெஜிஸ்டர் என இருக்கும் ஆப்ஷனை கிளிக் செய்து ஒரே நேரத்தில் 2 பேருக்கு டிக்கெட் புக் செய்ய முடியும் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications