விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி60 ராக்கெட்! உலக அரங்கில் மகத்தான சாதனை படைக்கும் இந்தியா!
ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி60 ரக ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் 220 கிலோ எடை கொண்ட இரண்டு ஸ்பேடெக்ஸ் விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிறுவ திட்டமிட்டுள்ளது. அதற்கான முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக ஸ்பேடெக்ஸ் திட்டம் (SPADEX-Space Docking Experiment) எனும் திட்டத்தின் கீழ் விண்ணில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி என 2 விண்கலன்களை தனியார் நிறுவன பங்களிப்புடன் இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்த இரட்டை விண்கலன்கள் தலா 220 கிலோ எடை கொண்டவை. இவை பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் வாயிலாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இன்று இரவு சரியாக 10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டு உள்ளது. இவை விண்ணில் 20 கிமீ தூரத்தில் வெவ்வேறு திசையில் நிலைநிறுத்தப்படும்.
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவுதலுக்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று இரவு 8.58க்கு தொடங்கியது. தொடர்ந்து எரிபொருள் நிரப்புதல் உட்பட இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இன்று இரவு 9.58க்கு விண்ணில் ஏவப்பட இருந்த நிலையில் செயற்கைக்கோள்கள் குறுக்கீடு காரணமாக 2 நிமிடங்கள் தாமதமாக 10 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ள விண்கலன்கள் புவியில் இருந்து 470 கி.மீ தூரம் கொண்ட வெவ்வேறு சுற்றுப்பாதைகளில் நிலைநிறுத்தப்பட உள்ளன. சில மாதங்களுக்கு பிறகு அவற்றை ஒன்றிணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
Lift off🚀 #ISRO #SPADEX pic.twitter.com/8GVI8X9Zwm
— ISRO InSight (@ISROSight) December 30, 2024
இணைப்பு சோதனை என்பது, விண்வெளியில் இருக்கும் ஒரு செயற்கைக்கோளுடன் இன்னொரு செயற்கைக்கோளை இணைக்கும் செயல்முறை. இதன் மூலம் இங்கு உள்ளவர்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும். அங்கு இருப்பவர்களை இங்கு மீண்டும் அழைத்து வர முடியும். இதுதவிர ராக்கெட் இறுதி பகுதியான பிஎஸ்-4 இயந்திரத்தில் போயம் (POEM-PSLV Orbital Experimental Module) என்ற பரிசோதனையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
செயற்கைக்கோள் இணைப்பு சோதனையை விண்வெளியில் வெற்றிகரமாக நடத்தி முடித்த நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. அதற்கு அடுத்து உலக அரங்கில் விண்வெளி செயற்கைகோள் இணைப்பை மேற்கொண்ட 4வது நாடாக இந்தியா இடம்பெறும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications