இஸ்ரோவின் 100ஆவது சாட்டிலைட்டில் திடீர் தொழில்நுட்ப கோளாறு.. மிஷன் தோல்வியில் முடியலாம் என அச்சம்
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ அமைப்பு கடந்த புதன்கிழமை தனது 100வது சாட்டிலைட்டை விண்ணுக்கு அனுப்பியிருந்தது. இதற்கிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக அந்த சாட்டிலைட்டை திட்டமிட்ட இடத்தில் நிறுத்த முடியுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய ஆய்வாளர்கள் முயன்று வரும் போதிலும், சிக்கல் தொடர்வதாகவே கூறப்படுகிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் விண்வெளி சார்ந்த ஆய்வுகளை இஸ்ரோ அமைப்பு தான் மேற்கொண்டு வருகிறது. தற்போது உலகின் மிகச் சிறந்த விண்வெளி ஆய்வு மையங்களில் ஒன்றாக இஸ்ரோ திகழ்கிறது.

100ஆவது சாட்டிலைட்:
சாட்டிலைட்களை விண்ணுக்கு அனுப்புவதில் இப்போது உலக நாடுகள் கூட இஸ்ரோ அமைப்பிடமே வருகிறது. இந்தளவுக்கு இஸ்ரோ சர்வதேச அரங்கில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதற்கிடையே இஸ்ரோ அமைப்பு தனது 100வது சாட்டிலைட்டை கடந்த புதன்கிழமை காலை விண்ணுக்கு அனுப்பியது. ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அந்த சாட்டிலைட் அனுப்பப்பட்டது.
ஆனால் இஸ்ரோவின் இந்த 100ஆவது சாட்டிலைட்டில் இப்போது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல்களை இஸ்ரோ தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளது. அதில், "சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடரைசரை ஏற்கும் வால்வுகள் திறக்கப்படாததால், செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் உயர்த்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சிக்கல்:
யு ஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தால் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோள் இந்தியாவின் மீது சுற்றும் வகையில் புவிசார் வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட இருந்தது. ஆனால், இப்போது செயற்கைக்கோளில் உள்ள திரவ இயந்திரம் சரியாகச் செயல்படாத நிலையில், இந்தத் திட்டம் தாமதமாகலாம் அல்லது முற்றிலும் கைவிடப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இந்த சாட்டிலைட்கள் நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ள நிலையில், அதை புவிவட்ட சுற்றுப்பாதையில் செலுத்த மாற்று ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வல்லுநர்கள் சொல்வது என்ன:
கடந்த புதன்கிழமை காலை 6:23 மணிக்கு, இஸ்ரோ தனது 100வது சாட்டிலைட்டை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து தனது ஜிஎஸ்எல்வி சாட்டிலைட் மூலம் விண்ணில் செலுத்தியது. இஸ்ரோவின் தலைவராக வி நாராயணன் பதவியேற்ற பிறகு வானில் ஏவப்பட்ட முதல் சாட்டிலைட் இதுவாகும். இந்த சாட்டிலைட்டில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், அதனால் திட்டமிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் போகலாம் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
2,250 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள், NavIC நேவிகேஷன் மிஷனுக்கு தேவையான சாட்டிலைட்டாகும். NavIC என்பது ஜிபிஎஸ் தொழில்நுட்பத்திற்கு இணையாகச் செயல்படும் ஒரு இந்திய சாட்டிலைட் ஆகும்.
இந்தியா இதை உருவாக்கியது ஏன்:
பாகிஸ்தானுடனான 1999 கார்கில் போர் சமயத்தில் ஜிபிஎஸ் தகவல்களை அணுகுவதில் இந்தியாவுக்குச் சிரமம் இருந்தது. இதனால் இந்தியா தனது சொந்த NavIC தொழில்நுட்பத்தை உருவாக்கியது. இருப்பினும், இது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை என்றே சொல்ல வேண்டும். 2013 முதல் NavIC மிஷனில் மொத்தம் 11 சாட்டிலைட்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதில் ஆறு சாட்டிலைட்கள் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications