ரூபாய் மதிப்பு உயர்வால் இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் நிறுவனங்களுக்கு பாதிப்பு!
தங்களது வருவாயில் பெரும்பாலான பங்கை டாலரில் ஈட்டும் இந்த நிறுவனங்களின் காட்டில் கடந்த சில மாதங்களாக புயலுடன் கூடிய கனத்த மழை பெய்தது. வெளிநாடுகளில் இருந்து வந்த டாலர்கள் இந்திய ரூபாய்க்கு மாறியபோது அதன் மதிப்பு 15 சதவீதம் வரை அதிகமாக இருந்தது.
மேலும் இந்திய பங்குச் சந்தைகளில் உற்பத்தித் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளில் போடப்பட்ட முதலீடுகளை ஏராளமான முதலீட்டாளர்கள் வாபஸ் பெற்று, அதை சாப்ட்வேர் நிறுவனங்களின் பங்குகளில் போட்டனர். ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிய, சரிய இந்த நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் என்ற கணக்கில் முதலீடு செய்யப்பட்ட பணம் இது.
ஆனால், கடந்த 6 நாட்களில் ரூபாயின் மதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக ஏறி இன்று 62.9 என்ற நிலையை அடைந்துவிட்டது. இதனால் இந்த நிறுவனங்களின் லாபத்திலும் அவற்றின் பங்குகளின் மதிப்பிலும் அடி விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவற்றுக்கு சறுக்கல் நேரலாம். இந்த நிறுவனங்களுக்கு பல நூறு கோடிகள் வரை வருவாய் குறையலாம்.
அதே நேரத்தில் அமெரிக்காவின் பொருளாதார நிலைமை ஸ்திரமடைந்து வருவது நீண்டகால நோக்கில் இந்த நிறுவனங்களுக்கு நல்லதே. அமெரிக்காவில் புதிய காண்ட்ராக்ட்கள் கிடைக்க இது வழி செய்யலாம்.