இது இந்தியா அல்ல.. பஞ்சாப்! பொற்கோவிலுக்குள் 'தேசிய கொடி' பெண்ணுக்கு அனுமதி மறுப்பால் சர்ச்சை!
அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோவிலுக்குள் முகத்தில் தேசிய கொடி வரைந்த இளம் பெண்ணை அனுமதிக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பஞ்சாப்பில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காலிஸ்தான் எனும் தனிநாடு கோரிக்கை பேசுபொருளாகி இருக்கிறது. காலிஸ்தான் பயங்கரவாதிகள், பஞ்சாப்பில் மீண்டும் தலையெடுத்துள்ளனர்.

இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் தனிநாடு உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்த பயங்கரவாதிகளின் கோரிக்கை. இதற்காக 1980ளில் ஆயுதப் போராட்டங்களை நடத்தினர். இந்த ஆயுதப் போராட்டத்தை பஞ்சாப் பொற்கோவிலுக்குள் வைத்தே முடித்தவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார். இதற்காகவே சீக்கியர் பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார் இந்திரா காந்தி. தற்போது மீண்டும் பஞ்சாப்பில் பிரிவினைவாத முழக்கங்கள் கேட்கின்றன.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பஞ்சாப் பொற்கோவிலை முன்வைத்து வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த வீடியோவில் தேசிய கொடியை முகத்தில் வரைந்த இளம் பெண் ஒருவர் பொற்கோவிலுக்குள் நுழைய முயல்கிறார். ஆனால் அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அத்துடன் அந்த வீடியோவில், இது ஒன்னும் இந்தியா இல்லை.. இது பஞ்சாப்.. என உரத்து கேட்கிறது பிரிவினைவாதியின் குரல். பொதுவாக பஞ்சாப் மற்றும் வட இந்தியாவில் நாட்டின் பிற பகுதி மக்களை நீங்கள் இந்தியர்தானே என பிரித்து பேசுவது வழக்கம். அதே குரல்தான் இந்த வீடியோவிலும் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், பொற்கோவில் நிர்வாகிகள் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துக்காக மன்னிப்பும் அவர்கள் கோரி உள்ளனர். அட்டாரி எல்லையில் இந்தியா- பாகிஸ்தான் நாட்டு வீரர்கள் கொடியேற்றம், கொடி இறக்கத்தை பார்வையிடும் மக்கள் அப்படியே பொற்கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications