மே. வங்கம்.. இடதுசாரிகளுடன் பேச்சுவார்த்தை தோல்வி.. பல மாநிலங்களில் கூட்டணிக்கு தடுமாறும் காங்கிரஸ்
Recommended Video
கொல்கத்தா: காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்திலும் தக்க கூட்டணியை உருவாக்குவதில் தவறிவிட்டது. இடதுசாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக கட்சிகள் தனித்தனியாக லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் சூழ்நிலை உள்ளது.
இதனிடையே மொத்தமுள்ள 42 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் மொத்தம் 38 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
"நரேந்திர மோடியின் பேரன் ராகுல்காந்தி".. வழக்கம் போல் உளறிக் கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்
மார்க்சிஸ்ட் திட்டம்
எஞ்சிய 4 தொகுதிகளை காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க அந்த கட்சி முன்வந்தது. 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, காங்கிரஸ் வெற்றி பெற்று இப்போது சிட்டிங் எம்பிக்களை கொண்டவை அந்த 4 தொகுதிகளாகும். எனவே அவற்றிற்கு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் பெயர்களை அறிவிக்காமல் கூட்டணி ஏற்படுத்த நினைத்தது.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்
ஆனால், கடந்த திங்கள்கிழமையே, காங்கிரஸ் கட்சி மொத்தம் 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. அதில், மார்க்சிஸ்ட் வெற்றி பெற்ற ராய்கஞ்ச் மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய தொகுதிகளும் அடங்கும். இதை மார்க்சிஸ்ட் விரும்பவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, தாங்கள் அறிவித்தபடிதான் போட்டியிடுவோம் என கூறிவிட்டது. இதனால், காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சிகள் நடுவேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
காங்கிரஸ் தலைவர் குற்றச்சாட்டு
"எங்கள் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை" என்று மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் ராஜ்ய சபா எம்.பி.யான பிரதிப் பட்டாச்சார்யா கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இடதுசாரிக் கட்சிகள் மீது குற்றம் சாட்டும் பட்டாச்சார்யா, "காங்கிரஸ் ஒரு கூட்டணியை விரும்பியது, இடதுசாரி தொகுதி பகிர்வில் அது வலியுறுத்தப்பட்டது. நாங்கள் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் கிடைக்கும் முடிவுகள் எங்களுக்கு பாதிப்பாக இருக்கும் என்று நம்புவதற்கு எந்த காரணமும் இல்லை. இதற்கு முன்னதாக நடைபெற்ற தேர்தல்களில், இதேபோன்ற மாநிலங்களிலிருந்து காங்கிரஸ் தனித்து போட்டியிட்டுதான் வெற்றி பெற்றது. அப்போதும் இந்த கட்சிகள் இங்குதான் இருந்தன" என்று தெரிவித்தார்.
கள யதார்த்தம் தெரியாத காங்கிரஸ்
ஆனால், அரசியல் பார்வையாளர்களோ, காங்கிரஸ் இன்னும் இந்திரா காந்தி கால நினைப்பில்தான் உள்ளதே தவிர கள யதார்த்தமே அவர்களுக்கு தெரியவில்லை என்கிறார்கள். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில், கூட்டணி அமைக்க முடியாமல் போனதற்கு, இதுபோன்ற மனநிலைதான் காரணம் என்று அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். காங்கிரசும், மாநிலங்களிலுள்ள பிற முக்கிய கட்சிகளும் இப்படி பிரிந்து மோதிக்கொள்வது, பாஜகவிற்குதான் ஆதாயம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.