இந்தியாவில் மன்மோகன் அரசு இல்லை, மோடி உள்ளார் என்பதை மனதில் வையுங்கள்: பாக். டிவியில் பரபர விவாதம்
டெல்லி: மும்பையில் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் நடப்பதாக வைத்துக்கொண்டால் பாகிஸ்தான் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கேட்ட பாகிஸ்தானின் முன்னணி டிவி சேனல் ஒன்றின் தொகுப்பாளினி விவாதத்தில் பங்கேற்றவரிடம், இந்தியாவில் இருப்பது மன்மோகன்சிங் அரசு கிடையாது, நரேந்திரமோடியின் அரசு என்பதை மனதில் வைத்து பதில் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
மும்பையில் மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் பாகிஸ்தானின் பலோசிஸ்தான் காணாமல் போய்விடும் என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பகிரங்கமாக எச்சரிக்கைவிடுத்திருந்தார். பிரதமர் மோடியின் வலது கரமாக செயல்படும் அஜித் தோவலின் எச்சரிக்கைக்கு, பாகிஸ்தான் மீடியாக்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தன.
தோவலின் எச்சரிக்கையை மறைமுகமாக பிரதமர் மோடியின் எச்சரிக்கையாகவே உணர்ந்து பதறின பாகிஸ்தான் மீடியாக்கள். இதன் ஒருகட்டமாக, பாகிஸ்தான் என்ற நாட்டை முற்றிலும் அழித்து ஒடுக்குவதற்கு ஆசைப்படும் ஒரு மனிதராகவே அஜித் தோவல் அங்குள்ள மீடியாக்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில சேனல் ஒன்றில் பாதுகாப்பு குறித்த விவாதம் சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற பார்வையாளரிடம் நிகழ்ச்சியின் பெண் நெறியாளர் கேட்ட ஒரு கேள்வி, பாகிஸ்தானின் அடி மனதில் உள்ள அச்சத்தை வெளிப்படுத்தியது.
அந்த பெண் கேட்கும்போது "ஒரு யூகமான கேள்வியை எழுப்புகிறேன். ஒருவேளை மும்பையில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றால், பாகிஸ்தான் நிலைப்பாடு என்னவாக இருக்கும்" என்றார். பங்கேற்பாளர் பதில் சொல்ல ஆரம்பிக்கும்போது குறுக்கிட்ட பெண் தொகுப்பாளினி "இந்தியாவில் மன்மோகன்சிங் அரசு இல்லை, நரேந்திர மோடியின் அரசு உள்ளது என்பதை மனதில் வைத்து பதில் சொல்லுங்கள்" என்று கூறினார்.
இந்த விவாத நிகழ்ச்சி வீடியோ, பாகிஸ்தானில் மட்டுமின்றி, இந்தியாவிலும், பரபரப்பாக பரவிவருகிறது. மோடி தலைமையிலான இந்திய அரசு மீது பாகிஸ்தானுக்கு உள்ள நடுக்கத்தை முன்னணி சேனல் நிகழ்ச்சியே வெளிப்படுத்திவிட்டதாக இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.