டீ விற்ற மோடியின் இந்த வளர்ச்சி வியப்பளிக்கிறது.. ஹைதராபாத்தில் இவாங்கா டிரம்ப் பேச்சு!
இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் ஹைதராபாத்தில் உரையாற்றினார்.
ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இவாங்கா டிரம்ப், டொனால்ட் டிரம்பிற்கு முதன்மை ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஹைதராபாத்தில் தற்போது நடந்து வரும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் இவர் கலந்து கொண்டார். மேலும் பிரதமர் மோடியுடன் மத்திய உணவும் சாப்பிட்டார்.
ஹைதாராபாத்தில் நடக்கும் இந்த மாநாட்டில் அவர் இந்தியா குறித்தும் மோடி குறித்தும் உரையாற்றினார்.
மோடியுடன் சந்திப்பு
ஹைதராபாத்தில் தற்போது சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடந்து வருகிறது. இன்று தொடங்கியுள்ள இந்த மாநாடு நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறும். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். இன்று காலை அவர் ஹைதராபாத்தில் விழா நடக்கும் இடத்தை அடைந்தார். காலை பிரதமர் மோடியை சந்தித்து அவருடன் மதிய விருந்து சாப்பிட்டார்.
|
இவாங்கா டிரம்ப் உரையாடல்
இந்த மாநாடு தொழில் முனைவோர்களுக்கானது என்றாலும் பெண் தொழில் முனைவோர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது. இதன் காரணமாகவே இவாங்கா டிரம்ப் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இவாங்கா டிரம்ப் தொழில் முனைவோர்கள் குறித்து இதில் உரையாற்றினார். அவர் தனது பேச்சில் இந்தியாவில் உள்ள பெண்கள் மிகவும் முன்னேறி உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் மோடியுடன் சேர்ந்து 'ரோபோ' ஒன்றின் மூலம் இந்த விழாவை தொடங்கி வைத்தார்.
மோடி குறித்து வியப்பு
மேலும் அவர் மோடி குறித்தும் பேசினார். அதில் ''தேநீர் விற்பவராக இருந்து பிரதமரான மோடியின் வளர்ச்சி வியப்பளிக்கிறது. குழந்தை பருவத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இருக்கும் மோடியின் வளர்ச்சி மிகப்பெரிய ஆச்சரியம் அளிக்கிறது. மாற்றம் எப்போதும் சாத்தியம் என்பதை மோடி நிரூபித்துள்ளார்'' என்று குறிப்பிட்டார்.
இந்தியா முன்னேறிவிட்டது
இந்தியாவின் வளர்ச்சி குறித்தும் இவாங்கா பேசியுள்ளார். அதில் ''அமெரிக்காவின் உண்மையான நண்பன் இந்தியா. இந்தியா உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் பொருளாதாரத்தை கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் நம்பிக்கையாக இந்தியா திகழ்கிறது. இந்தியா ரொம்பவே முன்னேறிவிட்டது. இங்கு நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
ஹைதராபாத் அழகு
அவர் தனது பேச்சில் ஹைதராபாத் குறித்தும் பேசியுள்ளார். அதில் அவர் ''எனக்கு ஹைதராபாத் வியப்பளிக்கிறது. ஒரு ஆன்மிக இடமாக இருந்த பகுதி பெரிய அறிவியல் நகரமாக மாறியிருக்கிறது. இந்த நகரத்தில் நிறைய பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். நிறைய பேர் தொழில் தொடங்க நினைக்கிறார்கள். ஹைதராபாத் தொழில்நுட்ப ரீதியாக பெரிய அளவில் வளர்ந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.