காஷ்மீரில் கூட்டணி ஆட்சி: மோடியுடன் பி.டி.பி. தலைவர் முப்தி முகமது சயீத் சந்திப்பு!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் புதிய கூட்டணி அரசு பதவியேற்க உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.)யின் மூத்த தலைவரும் முதல்வராக பதவியேற்க இருப்பவருமான முப்தி முகமது சயீத் இன்று சந்தித்து பேசினார்.
87 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி.) 28, பாரதிய ஜனதா கட்சி 25, தேசிய மாநாட்டு கட்சி(என்.சி) 15, காங்கிரஸ் 12 தொகுதிகளில் வென்றிருந்தன. இங்கு ஆட்சி அமைக்க 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. எந்த ஒரு கட்சிக்கும் 44 எம்.எல்.ஏக்கள் இல்லாததால் கூட்டணி அரசு அமைய வேண்டிய நிலை ஏற்பட்டது.

பி.டி.பி., பாரதிய ஜனதா கட்சிகளிடையே கூட்டணி அரசு அமைப்பது குறித்து பல மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் இரு கட்சிகளும் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் புதிய ஆட்சியை அமைக்க முடிவு செய்தன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரதிய ஜனதா முதல் முறையாக ஆட்சியில் பங்கேற்கிறது. அம்மாநிலத்தின் முதல்வராக பி.டி.பி.யின் மூத்த தலைவர் முப்தி முகமது சயீத் வரும் ஞாயிறன்று பதவியேற்க உள்ளார்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை முப்தி முகமது சயீத் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது ஞாயிறன்று நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவும் பிரதமர் மோடிக்கு முப்தி முகமது சயீத் அழைப்பு விடுத்தார்.
1989ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த வி.பி.சிங் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் முப்தி முகமது சயீத். காங்கிரஸ் ஆதரவுடன் 2002ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல்வராகவும் அவர் பதவி வகித்தார். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்க இருக்கிறார்.












Click it and Unblock the Notifications