முதல்வரின் பிரச்சாரத்தில் ‘நீதி வேண்டி’ கோஷம்... இளைஞருக்கு ‘பளார்’ விட்ட அமைச்சரால் பரபரப்பு
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல்வரின் பிரசார கூட்டத்தில் கோஷம் எழுப்பிய வாலிபரை, அம்மாநில அமைச்சர் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
லோக்சபா தேர்தலையோட்டி, ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா பாராமுல்லா மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றினார்.
உமர் அப்துல்லா பேசத் தொடங்கியதும், திடீரென கூட்டத்தில் அமர்ந்திருந்த அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஹில்லா அகமத் என்ற இளைஞர், ‘எங்களுக்கு நீதி வேண்டும்' எனக் கோஷம் எழுப்பத் தொடங்கினார்.
பிரச்சாரத்தை சீர்குலைக்கும் வகையில் அமைந்த அக்கோஷத்தால் ஆத்திரமடைந்த அம்மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் முகமது அக்பர், மேடையில் இருந்து கீழே இறங்கி கோஷம் எழுப்பிய இளைஞரின் கன்னத்தில் அறைந்து விட்டார்.
உடனடியாக அந்த இளைஞரையும், அவரது சகோதரரையும் போலீசார் அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் தொடர்ந்து பிரச்சாரக் கூட்டம் நடந்தது. ஆனால், பிரச்சாரக் கூட்டத்தில் இளைஞர் ஒருவரை அமைச்சர் அறைந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து கூட்டம் முடிவடைந்த பின்னர் அமைச்சர் முகமது அக்பர், நடந்த சம்பவத்திற்கு தனது வருத்தத்தினைத் தெரிவித்துக் கொண்டார். பின்னர் அறை வாங்கிய இளைஞரை அழைத்து தனது செயலுக்காக அவர் மன்னிப்பு கோரினார்.












Click it and Unblock the Notifications